
I எரேமியா 31: 31-34
II எபிரேயர் 5: 7-9
III யோவான் 12: 20-33
தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோரும், தமக்கென்றே வாழ்வோரும்
நிகழ்வு
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சமூக சேவர் ஜான் டி ராக்பெல்லர் (John D Rockefeller 1839-1937). ஒரு காலத்தில் இவர் பணமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக உழைத்தார்; அதற்காக இவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர்களைக் கசக்கிப் பிழிந்தார். இதனால் இவர் தனது 33 வது வயதில் மில்லியனராகவும், 43 வது வயதில் பில்லியனராகவும் ஆனார். தனக்குக் கீழ் வேலைசெய்து வந்த பணியாளர்களை இவர் தொடர்ந்து கசக்கிப் பிழிந்ததால் அவர்கள், “யாருக்கெல்லாமோ சாவு வருகின்றது… இவருக்குச் சாவு வராதா?” என்று சாடைமாடையாகப் பேசத் தொடங்கினார்கள். இதனாலோ என்னவோ இவருக்கு 53 வது நடக்கும்பொழுது அலோபேசியா (Alopecia) என்ற நோய் வந்தது. இந்த நோயின் காரணமாக இவருடைய இமைகளில் இருந்த முடியும், தலையில் இருந்த முடியும் கொட்டத் தொடங்கியது; இவர் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போனார். இதைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்கள் இவருடைய இறப்புச் செய்தியைத் தயார் செய்துவிட்டார்கள்.
இதையெல்லாம் அறிந்த இவர், தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தினார். ‘இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காக வாழ்ந்துவிட்டேன்; இனிமேல் நான் ஏன் மற்றவருக்காக வாழக்கூடாது’ என்று முடிவுசெய்தார். இதற்குப் பிறகு ராக்பெல்லர் பவுண்டேஷன் என்றோர் அமைப்பை இவர் தொடங்கி, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், ஆகியவற்றிற்குக் கோடிக்கணக்கில் உதவி செய்தார். மட்டுமல்லாமல் மலேரியா, காச நோய், டிப்திரியா ஆகிய நோய்களுக்கு இவர் தந்த உதவியினால் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு இவர் தனக்காக வாழாமல், பிறருக்காக வாழத் தொடங்கியதால் இவரது உடல்நலம் தேறி, 98 வயது வரை வாழ்ந்தார்.
ஆம், ராக்பெல்லர் தனக்காக வாழ்ந்தபொழுது சாவின் விளிம்புவரை சென்றார். எப்பொழுது அவர் பிறருக்காக வாழ்ந்தாரோ, அப்பொழுது அவர் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையானது, நமக்காக அல்ல, இயேசுவைப் போன்று பிறருக்காக வாழவேண்டும் என்ற சிந்தினையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கோதுமை மணியாய் மண்ணில் மடிந்த இயேசு
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண விரும்புவதோடு தொடங்குகின்றது. இயேசுவைக் காண விரும்பும் கிரேக்கர் பிலிப்பிடம் வருகின்றார்கள். ஒருவேளை பிலிப்பு பிறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவைச் சார்ந்தவர் என்பதால், அவர்கள் இயேசுவைக் காண விரும்பிப் பிலிப்பிடம் வந்திருக்கலாம். பிலிப்போ தன்னிடம் வந்த கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் செல்ல, மக்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்திரேயா (யோவா 1: 42; 6:9) அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றார். இவ்வாறு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் இயேசு பேசுகின்ற வார்த்தைகள்தான், “மானிடமகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது…..கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்பதாகும்.
இயேசு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் சொல்லும் இவ்வார்த்தைகளின்மூலம், அவர் தான் பாடுபட்டு இறந்து உயிர்த்தெழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது, இன்றைக்கு இவ்வுலகில் வாழும் பலரைப் போன்று தனக்காக வாழவில்லை; மாறாக, அவர் தான் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்து (திபா 10: 38), பிறருக்காக வாழ்ந்தார். இதைவிடவும் அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார் (யோவா 4: 34). இப்பொழுது தன் பாடுகளின் வழியாக தந்தையை மாட்சியைப்படுத்தவேண்டிய நேரம் வந்ததும்தான், அவர் தன்னைக் கோதுமை மணிக்கு உருவகப்படுத்தி, “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்கின்றார்.
தன்னைப் பின்பற்றுவோர் தன்னைப் போன்று வாழ அழைக்கும் இயேசு
கவிக்கோ அப்துல் இரகுமான் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெறும் இருவரிக் கவிதை இது: “மனிதர்கள் இந்த உலகிற்குப் பிச்சைக்காரர்களாக வருகின்றார்கள்; ஆனால் கடன்காரர்களாகச் செல்கின்றார்கள.” எவ்வளவு வேதனை மிகுந்த வரிகள் இவை. இந்த உலகத்திற்கு எதையுமே கொண்டு வராத மனிதர்கள், இங்குள்ள எல்லா வசதிகளையும் ஆண்டு அனுபவித்துவிட்டு, இந்த உலகத்திற்கு எதையுமே கொடுக்காமல் போனால், அவர்கள் கடன்காரர்கள்தானே!
நற்செய்தியில் இயேசு, இந்த உலகம் வாழ்வு பெறுவதற்காய்த் தான் கோதுமைமணியாய் மடியப்போவதைச் சுட்டிக்காட்டிவிட்டு, “தமக்கென வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்” என்கின்றார். அவ்வாறெனில், இயேசுவுக்குத் தொண்டுவோர், அவர் வழியில் நடப்போர் அவரைப் போன்று, தன்னையே இவ்வுலகம் வாழ்வு பெறத் தந்து, அவரைப் பின்பற்றவேண்டும். இது சீடர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையாக இருக்கின்றது.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மற்றும் யூதா வீட்டாரோடு புதிய உடன்படிக்கை செய்துகொள்ளப்போவதாகச் சொல்கின்றார். இப்புதிய உடன்படிக்கையின் மூலம், தான் அவர்களுக்குக் கடவுளாகவும், அவர்கள் தன் மக்களாகவும் இருப்பார்கள் என்கின்றார். நாம் கடவுளின் மக்களெனில், அவரது திருமகன் இயேசுவைப் போன்று நாமும் இவ்வுலகம் வாழ்வு பெற நம்மையே தரவேண்டும்.
தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமாகும் இயேசு
ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற, இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்த நிகழ்வு (மத் 26: 36-46; மாற் 14: 32-42; லூக் 22: 38-45), யோவான் நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும், அதையொத்த நிகழ்வு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இடம்பெறுவதாகத் திருவிவிலிய அறிஞர்கள் சொல்வர்கள்.
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன செய்வேன்?” என்கின்றார். இது குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்….. கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்” என்பார். இயேசு இவ்வாறு துன்பக் கிண்ணம் தன்னைவிட்டு அகலவேண்டும் என்று கண்ணீர் சிந்தி, மன்றாடினாலும், பின்னர் கடவுளுக்குச் செவிசாய்த்து, துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். ஆகவே, இயேசு இறைமகனாக இருந்தபொழுதும், துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோன்று, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் நம்மோடு செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப வாழவேண்டும். “கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது” (1 சாமு 15: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகவே, நாம் இயேசு எப்படித் தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றினாரோ அப்படி நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றி வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘அரைகுறைக் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள். புனிதப் பாதையில் விடாமுயற்சியோடு நடங்கள்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில் திருப்தியடைந்து விடாமல், கடவுளோடு நாம் செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப, இயேசுவைப் போன்று கடவுளுக்குக் கீழ்ந்ப்படிந்து பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
