
இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31
அக்காலத்தில்
இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.
அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார். அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
I எரேமியா 17: 5-10
II லூக்கா 16: 19-31
“ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்”
பணத்தின்மீது நம்பிக்கைகொண்டிருந்த பெண்மணி:
கின்னஸ் புத்தகம், உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே மிகவும் கஞ்சத்தமான ஆள் என்று அமெரிக்காவைச் சார்ந்த ஹெட்டி கிரீன் (Hetty Green 1834-1916) என்பவரைச் சொல்கிறது. காரணம், இவரது தந்தை இறந்தபொழுது அவர் இவருக்கு நூறு மில்லியன் டாலரை வைத்துவிட்டுச் சென்றபோதும் இவர் அதைச் செலவழிக்கவில்லை; மாறாக அதைப் ‘பொத்திப் பொத்தி’ வைத்திருந்தார். இவர் எப்பொழுதும் பணத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால், இவர் கணவர் இவரை விவாகரத்து செய்தார்.
இதற்குப் பிறகு இவர் தன் மகனோடு வாழ்ந்து வந்தார். நல்ல உணவு உண்டால் பணம் செலவாகிவிடும்; நல்ல உடை உடுத்தினால் பணம் செலவாகிவிடும் என்பதற்காக, மிகவும் சாதாரண உணவை உண்டு, சாதாரண உடையே உடுத்திவந்தார். தன் மகனையும் இவர் அவ்வாறே இருக்கச்செய்தார். ஒருமுறை இவருடைய மகன் நெத் (Ned) ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டான். அப்பொழுது இவர் தன் மகனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தால் மிகுதியான செலவாகும் என்று அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு இவருடைய மகனுக்குச் சரியாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் அவன் தன் கால்களை இழக்க வேண்டியதாயிற்று. இப்படி எப்பொழுதும் பணம் பணம் இருந்த இவர் திடீரென ஒருநாள் இறந்தார். அப்பொழுது இவருடைய சொத்து மதிப்பு நான்கு பில்லியன் டாலர்.
இவ்வளவு பணமிருந்தும், அதைச் செலவழிக்காமல் இருந்ததால்தான் கின்னஸ் புத்தகம் இவர், மிகவும் கஞ்சத்தனமான என்று குறிப்பிடுகின்றது. இன்றைக்குப் பலரும் இந்த ஹெட்டி கிரீனைப்போன்று பணம்தான் எல்லாம் என்று, அதை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இந்நிலையில் இன்றைய இறைவார்த்தை, பணத்தின்மீதோ, மனிதர்கள் மீதோ அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துவாழ அழைப்புவிடுக்கின்றது.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் இயேசு ‘செல்வரும் இலாசரும்’ என்ற உவமையைச் சொல்கின்றார். செல்வத்தின்மீது பற்றுக்கொண்டு வாழ்வோரின் முடிவு எப்படி இருக்கும் என்பதற்காக இயேசு சொல்லும் இவ்வுவமை, அவர் பணத்தாசை பிடித்த பரிசேயரைத் (லூக் 16: 14) மனத்தில் வைத்துச்சொல்லும் ஓர் உவமையாகும். இவ்வுவமையில் பணத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த செல்வந்தன் இறந்தபின் பாதாளம் செல்கின்றான்; ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த இலாசரோ விண்ணகம் செல்கின்றார்.
எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், மனிதரில் நம்பிக்கைவைப்போர் சபிக்கப்படுவர் என்கிறது. யூதாவை ஆண்டவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்ததாலேயே எரேமியா இப்படிச் சொல்கின்றார். எனவே, நாம் பணத்தின்மீதோ, மனிதர்கள்மீதோ அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
பொருள் ஆசையே எல்லாத்தீமைகளுக்கும் ஆணிவேர் (1திமொ 6: 10)
காசுக்கும் கடவுளுக்கும் ஒரேநேரத்தில் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24)
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் (திபா 118: 8)
இறைவாக்கு:
‘ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்’ (திபா 40: 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
