
திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்” என்றார்.
செக்கரியா வானதூதரிடம், “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே” என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார்.
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். “மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
“நம் மன்றாட்டைக் கேட்கும் கடவுள்”
நிகழ்வு
ஒரு சிற்றூருக்கு வெளியே இருந்த திருக்கோயில் அது. அந்தத் திருக்கோயிலில் பலரும் நம்பிக்கையோடு வேண்டிவிட்டுச் செல்வதுண்டு.
ஒருநாள் அந்தத் திருக்கோயிலுக்கு வந்த விவசாயி ஒருவர், “கடவுளே! இன்றைக்குத்தான் நான் நிலத்தை உழுது, விதை விதைத்திருக்கின்றேன். அதனால் நல்லதொரு மழையைத் தாரும்” என்று வேண்டிவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து தெருக்கூத்துக் கலைஞர் ஒருவர் வந்தார். அவர் கடவுளிடத்தில், “கடவுளே! இன்றிரவு இவ்வூரில் நான் தெருக்கூத்துக் கலையை நிகழ்த்த இருக்கின்றேன். அதனால் நீர் மழை பெய்யாதவாறு செய்யும்” என்று சொல்லிச் சத்தமாக வேண்டிவிட்டுச் சென்றார்.
இருவருடைய இறைவேண்டல்களையும் கேட்டுத் திருக்கோயிலுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த இறை நம்பிக்கை இல்லாத இளைஞர்க்கூட்டம் சத்தமாகச் சிரித்தது. பின்னர் அதிலிருந்த இளைஞன் ஒருவன், “ஒருவர் மழை வேண்டும் என்று வேண்டுகின்றார்; இன்னொருவர் மழை வேண்டாம் என்று வேண்டுகின்றார். கடவுள் யாருடைய வேண்டுதலுக்குத்தான் செவிசாய்ப்பார்?” என்று கேலியாய்ப் பேசினான். அதற்கு மற்ற இளைஞர்கள் “ஆமாம். கடவுள் யாருடைய வேண்டுதலுக்குச் சாய்க்கின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர்.
அன்று மாலை, பொழுது நன்றாக இருட்டியபிறகு தெருக்கூத்துக் கலைஞர், சக கலைஞர்களோடு தெருக்கூத்தினை நிகழ்த்துவதற்காக ஊரில் இருந்த ஒரு திடலில் வந்து நின்றார். ஊர் மக்களெல்லாம் அவர் நிகழ்த்தப் போகும் தெருக்கூத்தினைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்தனர். அப்பொழுது திடீரென மேகம் திரண்டுவந்து, மழை பெய்யத் தொடங்கியது. இதைப் பார்த்துவிட்டுத் தெருக்கூத்துக் கலைஞர் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவ்வூர்த் தலைவர், அங்கிருந்த பள்ளியின் தலையாசிரியரை அணுகிச் சென்று, “நம்மூருக்கு வந்திருக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள் தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கு பள்ளியில் உள்ள கலையரங்கை ஓரிரு மணி நேரங்களுக்குத் தந்தால் வசதியாக இருக்கும்” என்று சொல்ல, அவரும் அவ்வாறே செய்தார். இதனால் மக்கள் அனைவரும் தெருக்கூத்துக் கலையை இரம்மியான மழையோடு கண்டு இரசித்தார்கள்..
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையில்லாத இளைஞர்கள் “கடவுள் எல்லாருடைய வேண்டுதலுக்கும் செவிசாய்க்கின்றார். உண்மையில் அவர் மிகப்பெரியவர்” என்று சொல்லிக் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.
ஆம், கடவுள் தன்னிடம் நம்பிக்கையோடு வேண்டுகின்ற எல்லாருக்கும் செவிசாய்க்கின்றார். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவராகிய கடவுள் செக்கெரியாவின் மன்றாட்டுற்குச் செவி சாய்த்ததைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிள்ளை இல்லாத செக்கரியா–எலிசபெத் தம்பதி
ஆண்டவர் பார்வையில் நேர்மையாளர்களாய் விளங்கியவர்கள் செக்கரியாவும் எலிசபெத்தும். இவர்கள் இருவரும் கடவுளின் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாகவும் நடந்து வந்தார்கள்; ஆனாலும் இவர்களுக்குக் பிள்ளை இல்லை. ஒருவருக்குப் பிள்ளை இல்லாமல் இருப்பது ஆண்டவர் கொடுத்த தண்டனையாகவே யூதர்களால் பார்க்கப்பட்டது (லேவி 20: 20, 21). இரு ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் செக்கரியாவும் எலிசபெத்தும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, தங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்று தொடர்ந்து நம்பிக்கையோடு மன்றாடி வந்தார்கள்.
மன்றாட்டைக் கேட்ட இறைவன்
எருசலேம் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான குருக்கள் குருத்துவப் பணியை ஆற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் இருபத்து நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டாண்டுக்கு ஒருவாரம் வீதம் (1குறி 24: 4-19) எருசலேம் திருக்கோயிலுக்குள் சென்று, தூபம் காட்டி வந்தனர். இந்நிலையில் செக்கரியாவின் முறை வந்தபோது, அவர் திருக்கோயிலுக்குள் சென்று தூபம் காட்டுகின்றபொழுதுதான் வானதூதர், “செக்கரியா, உமது மன்றாட்டுக் கேட்கப்பட்டது” என்கிறார்.
ஆம், செக்கரியாவும் அவருடைய மனைவியும் கடவுளிடம் எழுப்பிய மன்றாட்டு உடனடியாகக் கேட்கப்படாவிட்டாலும், உரிய காலத்தில் கேட்கப்பட்டது. எனவே, நாம் கடவுளிடம் எழுப்புகின்ற மன்றாட்டு கேட்கப்படவில்லை என்று பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்காமல், அவர்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திருந்தால் நம்முடைய மன்றாட்டு ஒருநாள் கேட்கப்படும் என்பது உறுதி.
ஆகவே, நாம் இறைவனிடம் நம்பிக்கையோடும் பொறுமையோடும் நம்முடைய மன்றாட்டுகளை எடுத்துரைத்து, அவர் தருகின்ற அருளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘இந்த ஏழைக் கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்’ (திபா 34:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்முடைய கூக்குரலுக்குச் செவிசாய்க்கும் ஆண்டவரிடம் நம்முடைய வேண்டுதலை நம்பிக்கையோடு எடுத்துரைத்து, அதில் இறுதிவரை நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
