
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32
அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?
கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.
அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.
அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார்.
அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.
உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
மரியாவின் வியாகுலங்கள் .
மைக்கேல் ஆஞ்சலோ என்ற கலைஞன் வடித்த மிகவும் தத்ரூபமான ஒரு சிற்பம்தான் ‘Pieta’ என்பதாகும். இந்த சிற்பத்தில் இயேசுவின் இறந்த உடலை தாய் மரியா தன்னுடைய மடியில் வைத்திருப்பார். இந்த சிற்பத்தை அவர் வடிவமைத்துவிட்டு, மக்களுடைய பார்வைக்கு அதனை வைத்தார். அதைப் பார்த்த நிறையப் பேர் பாராட்டிச் சென்றார்கள். ஒருசிலர் சிற்பத்தில் மரியாவின் முகத்தில் இயேசுவை இழந்த கவலை தெரியவில்லை, அவர் மிகவும் இளமையாக இருப்பது போன்று தெரிகின்றார் என்று விமர்சனம் செய்தார்கள். அவர்களுடைய விமர்சனத்தைக் கேட்டுக்கொண்ட மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு பதில் சொன்னார்: மரியாவின் முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியாமல் இருப்பதற்குக் காரணம், அவர் இயேசுவின் இழப்பினால், துக்கப்படவில்லை என்று அர்த்தம் கிடையாது. மாறாக தன்னுடைய மகன் உயிர்த்தெழுவார் என்ற எதிர்நோக்கோடு இருந்தார். அதனால்தான் அவருடைய முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியவில்லை. மேலும் மரியா இளமைத் தோற்றத்தோடு இருப்பதற்குக் காரணம் அவருடைய தூய்மையும் மாசற்றதன்மைமே ஆகும். அவையே மரியாவை இளமையோடு இருக்கச் செய்தது.
இவ்வாறு அவர் பதில் சொன்னபிறகு சிற்பத்தை விமர்சனம் செய்தவர்கள் அமைதியாகச் சென்றார்கள்.
வரலாற்றுப் பின்னணி
வியாகுல அன்னையின் விழா பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வந்ததற்கான வரலாறு இருக்கின்றது. 1221 ஆம் ஆண்டு ஸ்கூனன் (Schonan) என்ற இடத்தில் வியாகுல அன்னைக்கென்று பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. அதன்பிறகு வியாகுல அன்னையின் பக்தி முயற்சிகளை சர்வைட்ஸ் சபையார் வளர்த்தெடுத்தனர். 1727 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் பெனடிக்ட் வியாகுல அன்னையின் விழாவை உலகும் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1913 ஆம் ஆண்டு, திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள், அதாவது திருச்சிலுவை மகிமை விழாவிற்கு அடுத்த நாளில் கொண்டாடப் பணித்தார். இவ்வாறு தோன்றியதுதான் வியாகுல அன்னையின் பெருவிழாவாகும்.
மரியாவின் ஏழு வியாகுலங்கள்
மரியா, வானத்தூதர் கபிரியேலின் வார்த்தைகளுக்கு ஆம் எனச் சொல்லி, இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கத் தொடங்கியதிலிருந்து, இறந்த இயேசுவை அடக்கம் செய்தது வரை அனுபவித்த வியாகுலங்கள் – துன்பங்கள் – ஏராளம். ஆனாலும் திருச்சபை மரியாவின் வியாகுலங்கள் ஏழு என்று மட்டும் பட்டியலிட்டிருக்கிறது. எனவே, அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:25-35)
மரியாவும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோசேப்பும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:34-35) என்று மரியாவிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாவின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல் (மத் 2:13-14)
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாவையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாவிற்கு இது ஒரு வியாகுலம்தான்.
சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல் (லூக் 2:43- 47)
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியா அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால் மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாவோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாவோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியா நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாவிற்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.
இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் (லூக் 23:27)
கள்வர்களுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியா மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.
சிலுவையின் அடியில் துணை நின்றது (யோவா 19:41,42)
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாவிற்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கை நெகிழ்ந்தது இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.
இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல் (யோவா 19: 40)
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியா பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாவிற்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல் (யோவா 19: 41-42)
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியா அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்?. மரியா தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாவைப் பொறுத்தளவில் பாடுகள் தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
மரி(அன்னை)யைப் போன்று துன்பங்களை ஏற்போம், அன்னைக்காக துன்பங்களை ஏற்போம்.
மரியா, இயேசுவுக்காக, இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேறுவதற்காக எவ்வளவோ துன்பங்களை, வியாகுலங்களை அனுபவித்தார். அவரைப் போன்று நாமும் இறைவனின் திருவுளம் இந்த மண்ணில் நிறைவேற வேண்டும் என்பதற்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுதான் இவ்விழா உணர்த்தும் முக்கியமான செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்று (மத் 16:24). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு இணங்க மரியா இயேசுவுக்காக, இறைத் திருவுளம் நிறைவேறுவதற்காக எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தார். அவரைப் போன்று நாமும் இயேசுவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயாராக இருக்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அது மட்டுமல்லாமல், நம்முடைய அன்னையர்களுக்காக நாம் துன்பங்களை ஏற்கவும் தியாகங்களை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றோமா? எனவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் நாம் வளரும்வரை பெற்றோரின், தாயின் உதவிகளை வேண்டிய மட்டும் பெற்றுக்கொள்கிறோம். வளர்ந்த பிறகு பெற்றோர்களை, தாயை முற்றிலுமாக மறந்துபோய்விடுகின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாமும் அவர்களுக்காக தியாகங்களை, துன்பங்களை மேற்கொள்ளத் துணியவேண்டும்.
Source: New feed
