
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக*
*ஆமென்*
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமானபோதும் ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசு அணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், ஜெபங்களினாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும், கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெரு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவர்களுக்கு நீர் வாக்களித்த விசேஷ உதவியையும் பாதுகாப்பையும் எனக்காக இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின்போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுக்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தால், எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
*(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்)*
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையைக் காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருஉள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளையும் இப்போது நான் செய்யப்போகும் ‘அருள் நிறை’ ஜெபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
*(அருள் நிறை ஜெபத்தை 9 முறை சொல்லவும்)*
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே, ‘அருள் நிறைந்தவள்’ என்று கபிரியேல் தூதர் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துதல்களைக் கூறுகிறேன், ஏற்றுக் கொள்ளும். நீர் அணிந்திருக்கும் முடியில் என் ஜெபங்கள் அத்தனையும் விண்மீன்கள் எனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமதன்பையும் பார்த்து, ஏழையான எனது ஜெபத்தை ஏற்று, என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே!
Source: New feed
