
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா
1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல் நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல், பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற அருட்சகோதரி, “நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார். அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும் திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை ( Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும் நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள் விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் கூறுகின்றார், “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று.
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால் நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக இருக்கின்றது.
இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம் இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.
நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், “சொர்க்கமும், நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்” என்று குறிப்பிடுகின்றார். ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை, சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின் அருமையான கருத்து.
Source: New feed
