
முதலில் புனிதர்கள் என்பவர் யார்?, எதற்காக நாம் அவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம். புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள் – தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. “உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்” (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களுடைய வழியில் நடக்கவேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றது.
இரண்டாம் வத்திகான் சங்கமானது “தூயவர்களின் வாழ்விலே மாதிரியையும் அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும் அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகின்றோம்” என்கிறது. ஆகவே, புனிதர்கள் அல்லது தூயவர்களின் விழாவைக் கொண்டாடுவதால் பயன்பெறப் போவது என்னமோ நாம்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை இப்போது உணர்ந்துகொள்வோம். புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.
Source: New feed
