லூக்கா 2: 22-35
பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாம் இயேசு
நிகழ்வு
ஒரு பங்கில் மூதாட்டி ஒருவர் இருந்தார். அவர் பங்குப் பணியாளரைச் சந்திக்கின்றபொழுதெல்லாம், “கடவுள் ஏன் இன்னும் என்னை எடுத்துக்கொள்ளவில்லை…?” என்று அங்கலாய்த்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் அந்த மூதாட்டி இதே வார்த்தைகளைச் சொல்லி அங்கலாய்த்தபொழுது பங்குப் பணியாளர் அவரிடம், “கடவுள் ஏன் இன்னும் என்னை எடுத்துக்கொள்ளவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல், உங்கள் வாழ்க்கையால் தொடப்பட்டு, இன்றும் மகிழ்வோடு இருப்பவர்கள் எத்தனை பேர் என்று சற்று எண்ணிப் பாருங்கள்” என்றார்.
பங்குப் பணியாளர் சொன்ன வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கிய மூதாட்டி, தன்னுடைய வாழ்வால் தொடப்பட்டு, மகிழ்வோடு இருப்பவர்கள் வெகு வெகு சொற்பம் என்பதை உணர்ந்தார். இதற்குப் பின்னர் அவர் இயேசுவிடம், “இயேசுவே நான் உம்மைப் போன்று ஒளியாய் இருக்க, யாருக்காவது என்னைப் பயன்படுத்த எனக்கு அருள் தாரும்” என்று வேண்டிக்கொண்டார்.
அவர் வேண்டிக்கொண்டது போன்றே, ஒவ்வொருநாளும் தன்னை மற்றவருக்குப் பயனுள்ள விதமாய்ப் பயன்படுத்தி ஒளியாய் விளங்கினார். இதனால் அவரால் பலரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற மூதாட்டி தன்னுடைய பகுதியில் இருந்தவர்களுக்குத் தன்னைப் பயனுள்ள விதமாய்ப் பயன்படுத்தி ஒளியாய் விளங்கினார். இன்றைய நற்செய்தியில் வரும் சிமியோன் குழந்தை இயேசுவை, பிற இனத்தாருக்குக் வெளிப்பாடு அருளும் ஒளி என்கின்றார். சிமியோன் குழந்தை இயேசுவைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் தாய் மரியாவும், அவருடைய கணவரான யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கின்றார்கள். மோசேயின் சட்டப்படி, ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் (விப 13:2, 12-15). அந்த அடிப்படையில் இயேசு கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றார். அவ்வாறு அவர் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படும்பொழுது, இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகள் பலியாகக் கொடுக்கப்பட்டன.
ஆட்டுக் குட்டியைக் கொண்டு வர வசதியில்லாதவர்கள் இரண்டு காட்டுப் புறாக்களையோ அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு பலி கொடுக்கலாம் என்று மோசேயின் சட்டம் சொன்னது (லேவி 12:8). அதன் பொருட்டு இயேசுவின் தாய் மரியாவும், அவருடைய கணவரான யோசேப்பும் இரு மாடப் புறாக்கள் அல்லது இரு புறாக் குஞ்சுகளை பலியாகக் கொடுத்ததை வைத்துப் பார்க்கும்பொழுது, அவர்கள் வசதியில்லாதவர்கள் என்று தெரிய வருகின்றது. தங்களுக்கு வசதியில்லாத சூழலில் மரியாவும் யோசேப்பும் மோசேயின் சட்டப்படி நடந்தார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒளியாம் இயேசு
குழந்தை இயேசு, எருசலேம் திருக்கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றபொழுது, அங்கு வருகின்ற சிமியோன், அவரைத் தம் கையில் ஏந்தி, அவரைக் குறித்து ஒருசில வார்த்தைகளைப் பேசுகின்றார். அவ்வாறு அவர் பேசுகின்ற வார்த்தைகள்தான், “…..இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி” என்பதாகும்.
இயேசு, யூதருக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் ஒளியாக இருப்பார் (எசா 42: 6) என்று இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்திருப்பார். இங்கு சிமியோன், இயேசு பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி என்று கூறுகின்றார். ஆம், உலகின் ஒளியான இயேசு (யோவா 8: 12) தன்னுடைய வாழ்வாலும் போதனையாலும் தான் உலகிற்கே ஒளி என்பதை உணர்த்தினார். இயேசுவால், “நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கின்றீர்கள்” (மத் 5: 14) என்று சொல்லப்பட்ட நாம், உலகிற்கு ஒளியாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த உலகை இருளின் சக்திகள் ஆண்டுகொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், உலகிற்கு ஒளியாய் வந்த இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
நாம் இயேசுவைப் போன்று உலகிற்கு ஒளியாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்!’ (மத் 5: 16) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய எடுத்துக்காட்டான வாழ்வால் நம்முடைய ஒளியை மனிதர் முன் ஒளிரச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed