
நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு, உரோம் நகரில் பிலிப்பீன்ஸ் அருள்பணியாளர்களுக்கென பாப்பிறை கல்லூரி திறக்கப்பட்டதன் 60ம் ஆண்டு ஆகிய நிறைவுகளையொட்டி, பிலிப்பீன்ஸ் பாப்பிறை கல்லூரி மாணவர்களை, மார்ச் 22, இத்திங்கள் காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரை நிகழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த, ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை நினைவுகூரும் வேளையில், காலம் குறித்த சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வு வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் கடந்த காலம் குறித்து முதலில் நோக்குவோம் என கேட்டுக்கொண்டார்..
கடந்தகாலத்திற்கு நாம் திரும்பிச்செல்லும்போது, இயேசுவின் அன்பை நம்மில் விதைத்தவர்களையும், நம் இறையழைத்தலுக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வோம் என்றுரைத்த திருத்தந்தை, எந்த ஒரு தடையையோ, மனத்தளர்வையோ நாம் எதிர்கொள்ளும் வேளையில், நம் கடந்தகால மகிழ்வு நிலைகளை நினைவுகூர்ந்து, அவற்றிலிருந்து பலம் பெறுவோம் என அழைப்பு விடுத்தார்.
பழைய நிலைகளிலிருந்து நம் விசுவாசம், மற்றும் இறையழைத்தல்களுக்குத் தேவையான உறுதிப்பாட்டை நாம் பெறும்போது, வருங்காலத்திற்கான வாசலை அது திறப்பதுடன், நம்பிக்கையையும் வழங்குகிறது, என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது, அதன் இயல்பிலேயே வருங்காலத்தை நோக்கமாகக் கொண்டது, என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்காலத்தில் நாம் அடைக்கலம் தேடும் வேளையில், அது, நிகழ்காலத்தை எதிர்கொள்வதற்கான நம் பலத்தை நம்மிடமிருந்து பறித்து விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
Source: New feed
