
நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள்
இயேசு தம் உயிர்ப்புக்குப்பின், திபேரியக் கடல் அருகே தம் சீடர்களுக்கு மீண்டும் தோன்றியதை விளக்கும் நற்செய்தி பகுதி (யோவா.21:1-19) குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் இறப்பிற்குப்பின், தங்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன என்று மனம்சோர்ந்திருந்த சீடர்கள் மீன்பிடிப் படகில் இருந்தபோது கடற்கரையில் இயேசுவைப் பார்த்தனர், அவர்கள் வாழ்விலும் கதிரவன் உதித்தான் என்று கூறினார்.
எனவே, உங்களின் அனைத்துக் கனவுகளும் தகர்க்கப்பட்டுள்ளதாக உணரும்போதும், எல்லாமே முடிந்துவிட்டது என்ற நிலையிலும், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று இளையோரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, சோதனைகளை எதிர்கொள்ளும் நேரங்கள் உண்டு, அவை, நம் இயலாமையை உணரவைக்கும், அவ்வேளையில், ‘நான் இருளுக்குப் பயப்படுவேன்’ என்று அச்சத்தோடு நாம் கூறக்கூடாது என்று எடுத்துரைத்தார்.
நம் பயங்களைப் பகிர்தல்
நாம் எல்லாருமே சிலநேரங்கள் பற்றி அஞ்சுகிறோம், அந்நேரங்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ளவர்களோடு நம் அச்சங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இருளில் குடியிருக்கும் நம் பயங்களின்போது, ஒளிக்கு வரவேண்டும், உண்மை அவற்றை உடைத்தெறியும் என்றும், பயப்படும்போது மனம்சோர்ந்துவிடாமல், அதை ஒளிக்குக் கொணரவேண்டும், அப்போது அது உங்களுக்கு நன்மைபயக்கும் என்று கூறினார். வளர்இளம்பருவத்தினர், ஆண்டவரைக் காண்பதற்குத் திறனைக் கொண்டிருக்கின்றனர் என்று, அவர்களை ஊக்கப்படுத்தி, இன்னலான சூழல்களில் நம் தாய் மரியாவிடம் வேண்டுங்கள் என்றுரைத்து, தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நிகழ்வில், அறுபது இத்தாலிய ஆயர்கள், பத்துக்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் இந்த வளர்இளம்பருவத்தினர் உரோம் பெருநகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டனர்.
Source: New feed