
பெருநகர் ஒன்றில் சிறிய மருத்துவமனை ஒன்று இருந்தது. அந்த மருத்தவமனையின் அவரசச் சிகிச்சைப் பிரிவில் இறக்கும் தருவாயில் நோயாளி ஒருவர் இருந்தார். அவர், தான் இறந்த பிறகு என்ன ஆவோமோ என்று பயந்துகொண்டே இருந்தார். அப்போது அங்கு வந்த தலைமை மருத்துவரிடம் நோயாளி, “ஐயா! நான் இறப்பதைக் குறித்து பயப்படவில்லை, ஆனால் நான் இறந்தபிறகு என்ன ஆவேனோ என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு பயமாகக் இருக்கிறது” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு அவர் மருத்துவரிடம், “நீங்கள்தான் கிறிஸ்தவராயிற்றே! நான் இறந்தபிறகு என்ன ஆவேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?, தெரிந்தால் சொல்லுங்களேன்” என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு அந்த மருத்துவர், “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிலளித்தார்.
அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இருந்த அறையின் கதவை யாரோ தட்டுவது போன்று இருந்தது. உடனே மருத்துவர் சென்று கதவைத் திறந்தார். அப்போது மறுபக்கத்திலிருந்து மருத்துவரின் செல்ல நாயானது அவர்மீது வந்து அன்போடு பாய்ந்தது. அவர் அதனை அன்போடு தாங்கிக்கொண்டார். பின்னர் நோயாளியிடம் திரும்பி வந்த மருத்துவர் இவ்வாறு பேசத் தொடங்கினார், “ஐயா! உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய நாய் இந்த அறைக்குள் இதற்கு முன்பு வந்ததில்லை, இந்த அறை எப்படி இருக்கும் என்பதுகூட அதற்குத் தெரியாது. ஆனால் நான் இந்த அறையின் கதவைத் திறந்தபோது அது என்மீது வேகமாகப் பாய்ந்தது. அதற்குத் தெரிந்திருக்கிறது இந்த அறையில் அதன் தலைவனாகிய நான் இருக்கிறேன் என்று. இது போன்றுதான் இறப்புக்குப் பிறகு என்ன ஆவீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இறப்புக்குப் பிறகு எல்லாம் வல்லவராகிய ஆண்டவரைச் சந்திப்பீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.
இவ்வார்த்தைகளை கேட்டபிறகு இறக்கும் தருவாயில் இருந்த அந்த நோயாளி, தான் இறந்த பிறகு ஆண்டவரைச் சந்திக்க இருக்கின்றோம் என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார். இறந்த பிறகு கிறிஸ்துவோடு – கடவுளோடு – இருக்கப் போகிறோம் என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு (பிலி 1:23) இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நம்முடைய குடும்பங்களில் மரித்த அன்பர்கள், நம்மைவிட்டுப் பிறந்த நண்பர்கள், உற்றார் உறவினார்கள், யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.
இறந்தவர்களை நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்குப் பலி ஒப்புக்கொடுக்கும் வழக்கம் மக்கபேயர் காலத்திலிருந்து இருப்பதை விவிலியத்திலிருந்து நாம் படித்தறிகின்றோம். யூதா மக்கபேயு போரில் இறந்தவர்களின் பாவம் போக்கும் பலியாக ஆறு கிலோ வெள்ளி சேகரித்து, அதனை எருசலேம் திருக்கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான். அவன் இப்படிச் செய்ததற்குக் காரணம் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள் என்பதில் அவன் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தான். (2 மக் 12: 46). இறந்தவர்களுக்கு என்று தனியொரு நாளை ஒதுக்கி, அதில் அவர்களை நினைவுகூர்ந்து பார்க்கும் பழக்கம் கிபி. ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 998 ஆம் ஆண்டு குலூனியில் இருந்த ஓடிலோ என்ற துறவி, தன்னுடைய சபைத் துறவிகளிடம் அனைத்துப் புனிதர்களுக்கு அடுத்தநாளில் அதாவது நவம்பர் 2 ஆம் நாள் இறந்தவர்காக பலி ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற ஆணையை விடுத்தார். அவருடைய ஆணைக்கிணங்க சபைத் துறவிகளும் அன்றைய தினத்தில் இறந்தவர்களுக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். பதினான்காம் நூற்றாண்டில் துறவிகள் மட்டுமல்லாது, எல்லா மக்களுக்கும் இதனைக் கொண்டாடும் வழக்கம் உண்டானது.
Source: New feed
