தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்”
முன்பொரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ஏதெல்ரெட் என்றோர் அரசன் இருந்தான். அவன் ‘எதிரி நாட்டுப்படை தன் நாட்டின்மீது படையெடுத்து வருமே! அதற்காகத் தன் நாட்டுப் படையைத் தயார்படுத்த வேண்டுமே’ என்ற எண்ணம் கடுகளவுகூட இல்லாமல் மிகவும் மெத்தனமாக இருந்தான். இதனால் அவன் எதற்கும் தயாரில்லாதவன் என்பதைக் குறிக்கும் வகையில் ‘Ethelret the Unready’ என்று அழைக்கப்படலானான்.
இதற்கிடையில் அவனைக் கூர்ந்து கவனித்து வந்த தானேஷ் என்ற அரசன், இங்கிலாந்து நாட்டின்மீது படையெடுத்து வந்து, அந்நாட்டின் பல இடங்களைக் கைப்பற்றி, அவனையும் கைதுசெய்து இழுத்துக் கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தான்.
வாழ்க்கையில் எதற்கும் தயாரில்லாமல், ஏனோதானோ என்று இருப்பவர்கட்கு கடைசியில் இப்படியொரு நிலைமைதான் ஏற்படும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம் மானிடமகனுடைய இரண்டாவது வருகைக்கு ஒவ்வொருவரும் எப்படித் தயாராக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்சொல்வதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆயத்தமாக இருக்கவேண்டும்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மானிடமகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது அதற்காக ஒவ்வொருவரும் தயாராக இருக்கவேண்டும் என்று பேசுகின்றார். நற்செய்தியில் இயேசு கூறுகின்ற ‘உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள்’, ‘விளக்குகள் எரிந்து கொண்டிருக்கவேண்டும்’ என்ற வார்த்தைகள், நாம் ஒவ்வொருவரும் மானிடமகனுடைய வருகைக்குத் தயாராக இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இருக்கின்றன.
பொதுவாக யூதர்களுடைய திருமண விழாக்கள் இரவுநேரத்தில்தான் நடக்கும். ஏனென்றால், மணமகன் வருவதற்கு வெகுநேரம் ஆகலாம். அதன்பின்னர்தான் திருமண விருந்தானது நடைபெறும். எனவே, திருமண விருந்து முடிவதற்கு எப்படியும் நள்ளிரவுகூட ஆகலாம். அதன்பின்னர்தான் திருமண விருந்துக்குச் சென்றவர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிவர முடியும். போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக்காலத்தில் திருமண விருந்துக்குச் செல்லக்கூடிய தலைவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிவர எப்படியும் இரண்டாம் அல்லது மூன்றாம் சாமவேளை கூட ஆகலாம். அந்த நேரத்திலும் விழிந்திருந்து, தலைவரை வரவேற்கும் பணியாளர்தான் பேறுபெற்றவர் என்று குறிப்பிடுகின்றார் இயேசு.
இந்த உண்மையை நாம் இயேசுவின் இரண்டாம் வருகையோடு ஒப்பிட்டால் இன்னும் தெளிவாக உண்மை விளங்கும். மானிடமகன் எந்த நேரத்திலும் வரலாம். அவர் வருகின்றபோதுபோது நாம் தயாராக இருந்தால் பேறுபெற்றவர்கள் ஆவோம் என்பது உறுதி.
ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக பதற்றமோ பயமோ கொள்ளத் தேவையில்லை
மானிடமகனுடைய வருகைக்காகத் தயாராக இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இதையொட்டி இன்னோர் உண்மையையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மானிடமகனுடைய வருகைக்காக நாம் பதற்றமோ பயமோ கொள்ளத் தேவையில்லை என்பதாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ‘அன்றன்றைய பணிகளை அன்றன்றே செய்தல்’ என்று நிகழ்காலத்தில் வாழ்ந்தோமெனில், திடீரென மானிடமகன் வருகின்றபோது அவரை நினைத்து நாம் கலங்கத் தேவையில்லை.
ஆயத்தமாக இருப்போர்க்கு ஆண்டவர் தரும் வெகுமதி
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லும் மிக முக்கியமான செய்தி, தலைவர் வரும்போது எந்தப் பணியாளர் விழித்திருக்கின்றாரோ அல்லது தயாராக இருக்கின்றாரோ அவர்க்கு தலைவரே வந்து பணிவிடை செய்வார் என்பதாகும்.
வழக்கமாக பணியாளர்கள்தான் தலைவர்கட்குப் பணிவிடை செய்யவேண்டியிருக்கும். ஆனால், மானிடமகனைக் குறித்து இயேசு சொல்லும் இந்த உவமையில், தலைவரே விழிப்பாய் இருக்கும் பணியாளர்க்குப் பணிவிடை செய்வார் என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு கூறிய, “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு வந்தார்” (மத் 20: 28) என்ற சொற்கள் நிறைவேறுகின்றன. இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியதை இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இயேசுவே நமக்குப் பணிவிடை செய்வது என்பது எத்துணை பெரிய பேறு. அந்தப் பேற்றினை நாம் பெற்றுக்கொள்வதற்கு, நாம் அவருடைய வருகைக்காக, அவருக்கு உகந்தவற்றைச் செய்து தயாராக இருக்கவேண்டும். இயேசு சொல்லும் ஊதாரி மைந்தன் உவமையில் வரும் தந்தை, தன் இளைய மகன் எப்போது வருவான் என்று அவனை வரவேற்கக் காத்துக் கொண்டிருப்பார் (லூக் 15: 11-32). அவரைப் போன்று நாம் ஆண்டவர் இயேசுவை வரவேற்கத் தயாராகவும் காத்துக்கொண்டும் இருக்கவேண்டும். அப்படி நாம் இருந்தோம் எனில், பேறுபெற்றவர்கள் ஆவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்து இல்லை.
சிந்தனை.
‘இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளர்க்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்’ (மத் 24: 43) என்பார் இயேசு. ஆகையால், நாம் எந்த நேரத்திலும் வரக்கூடிய மானிடமகனுடைய வருகைக்காகத் தயாராக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed