
இலாசரின் கல்லறைக்கு முன், இயேசு, கட்டளை வடிவில் கூறிய சொற்களில் நம் தேடலை சென்ற வாரம் துவங்கினோம். இன்று தொடர்கிறோம். “கல்லை அகற்றிவிடுங்கள்” என்பது, இயேசு வழங்கிய முதல் கட்டளை. “கல்லே அகன்று போ” என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். ஆனால், தான் ஆற்றப்போகும் புதுமையில் கல்லறையைச் சுற்றியிருந்தோரையும் ஈடுபடுத்த விரும்பினார் இயேசு. கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப, அம்மக்களுக்குச் சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்றுணர்ந்தவராய், “கல்லை அகற்றிவிடுங்கள்” என்ற கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.
நம் இல்லங்களில் இடம்பெறும் ஓர் அழகான நிகழ்வை, கற்பனையில் அசைபோடுவோம். இரு கைகளையும், கால்களையும் கொண்டு தரையில் தவழும் குழந்தை, முதல் முறையாக, தட்டுத் தடுமாறி, எழுந்து நிற்பதும், நடப்பதும், குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தும் ஓர் அனுபவம். அக்குழந்தை, கீழே விழுந்து அழுவதும், இந்த முயற்சியின் ஒரு பகுதி. கீழே விழும் குழந்தையைத் தூக்கிவிட்டு, அதைத் தேற்றி, மகிழ்வித்து, மீண்டும் நடக்கச்சொல்லி பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு மாறாக, குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, அக்குழந்தையை நடக்கவிடாமல், தூக்கிச் சுமந்தால், குழந்தை, நடை பழகவே பழகாது. அதுபோலத்தான், கடவுளும். நம்மால் இயன்றதை நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.
பல வழிகளில் செயலாற்றும் இறைவனோடு, நமது முயற்சிகளும் இணையவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு கதை இது. ஊருக்குள் வெள்ளம் வந்தது. மக்களெல்லாம் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் தன் வீட்டுக் கூரை மேல் ஏறி நின்று, தன்னை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தார். வெள்ளத்தில் சிக்கிய ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமரம் என்று பல பொருட்களைப் பயன்படுத்தி, வெளியேறினர். கடவுளுக்காக காத்துக்கொண்டிருந்தவரையும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அவரோ, அவர்கள் தந்த அழைப்பை மறுத்துவிட்டு, தன்னை கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
வெள்ள நிலைமை மோசமானதை அறிந்த அரசு, விரைவில் இராணுவத்தை அனுப்பி, மக்களை வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. இவர் மட்டும், எந்த உதவியையும் பெறாமல், கடவுள் வருவார் என காத்துக்கொண்டிருந்தார். வெள்ளம் கூரையைத் தொட்டது. இறுதியில் கூரை மீது நின்று கொண்டிருந்தவரைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் வழியாக முயற்சிகள் நடந்தன. கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று கூறி, அவர் அந்த உதவிகளைப் பெற மறுத்தார். இறுதியில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். மறு உலகில், அவர், கடவுளைச் சந்தித்தபோது, “கடவுளே, ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?” என்று அவர் முறையிட்டார். அப்போது, கடவுள், “நான் அனுப்பிய அத்தனை உதவிகளையும் மறுத்துவிட்டாய். பின்பு, உன்னை என்னால் எப்படி காப்பாற்ற முடியும்?” என்று கேட்டார்.
முன்பு ஒரு முறை பார்த்த ஓர் அழகான பழமொழி நினைவுக்கு வருகிறது. “God could not be present everywhere, so he created mothers.” அதாவது, “கடவுள் எல்லா இடங்களிலும் பிரசன்னமாக முடியாது என்பதால், அன்னையரைப் படைத்தார்.”
அன்னையரின் அன்பை அழுத்தந்திருத்தமாய் உணர்த்துவதற்கு சொல்லப்பட்டுள்ள ஒரு யூதப் பழமொழி இது. இந்தப் பழமொழி, ஒரு கோணத்தில், அழகானதொரு பொருளை உணர்த்துகிறது. கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தாலும், அன்னையர்கள் செய்யக்கூடியவற்றை, பொதுவாகவே, மனிதர்கள் செய்யக்கூடியவற்றை அவர்களே செய்யவேண்டும் என்று இறைவன் விட்டுவிடுகிறார். அவற்றில், கடவுள் தலையிடுவதில்லை.
இலாசரின் கல்லறைக்கருகே திரும்புவோம். யூதக் கல்லறைகள் மேல் வைக்கப்படும் கல், மிகவும் கனமானது. பலர் சேர்ந்து உருட்டினால்தான், அது நகரும். இயேசு, கல்லை அகற்றச் சொன்னதும், அவரது கட்டளையை நிறைவேற்ற ஒருசிலர் முன்வந்த வேளையில், கல்லை நகர்த்தினால் உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையை, மார்த்தா, இயேசுவிடம் கூறுகிறார். மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் வரும்படி அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே தங்கிவிடுவது நல்லதல்ல.
புகழ்பெற்ற உரோமையக் கவிஞர் வெர்ஜில் (Virgil) அவர்கள், ஓர் அரசரைப்பற்றிக் கூறும் கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில், இங்கு நல்லதொரு பாடம் நமக்காகக் காத்திருக்கிறது. அந்த உரோமைய அரசர், பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில் மிகக் கொடுமையான ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி, அந்தப் பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல் இத்தண்டனையை விவரிப்பது நல்லதல்ல.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இத்தகைய சித்ரவதையை, நம்மில் பலர், நமக்கே கொடுத்துக் கொள்கிறோம்.. இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்துவாழும் எத்தனை பேரை நாம் அறிவோம்! அல்லது, எத்தனை முறை, நாம், இறந்தகாலம் என்ற பிணத்துடன், இருளில் வாழ்ந்திருக்கிறோம்! நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்ரவதைகளிலிருந்து நம்மை வெளியேற்ற, கல்லறையை மூடியிருக்கும் கல்லை அகற்றும்படி இயேசு கட்டளையிடுகிறார். இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், ஏன், பெரும் மலையே ஆனாலும் சரி, அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார். இயேசு மார்த்தாவிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
மார்த்தாவிடம் இயேசு கூறிய நம்பிக்கைச் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள், கல்லறையை அடைத்திருந்த கல்லை அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து, இயேசு விண்ணகத் தந்தையை நோக்கி ஒரு செபத்தை எழுப்பினார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார். தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் தந்தையுடன் தொடர்புகொண்டு வாழ்ந்த இயேசு, ஒரு சில புதுமைகளில், இறைவனோடு சிறப்பான தொடர்பு கொண்டபின், அப்புதுமைகளை ஆற்றியதாக நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம்.
Source: New feed