
I 1சாமுவேல் 26:2,7-9, 12-13, 22-23
II 1கொரிந்தியர் 15:45-49
III லூக்கா 6:27-38
உன்னதக் கடவுளின் மக்கள் யார்?
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ப்ரோகுளுஸ் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அந்த அடிமைகளில் பாலுஸ் என்ற அடிமையை அவருக்கு மிகவும் பிடிக்கும். பாலுஸ் தன்னுடைய கடமைகளில் மிகவும் பொறுப்புள்ளவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அதனாலேயே அவனை ப்ரோகுளுஸிக்கு மிகவும் பிடித்துப் போனது.
ஒருநாள் ப்ரோகுளுஸ் தன்னோடு பாலூசையும் கூட்டிக்கொண்டு, புதிதாக அடிமைகளை விலைக்கு வாங்க அடிமைச்சந்தைக்குச் சென்றார். அடிமைகளை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு இருவரும் எந்தெந்த அடிமைகளையெல்லாம் விலைக்கு வாங்கலாம் என்று ஒரு பார்வை பார்க்க அடிமைச் சந்தைக்குள்ளே சென்றனர். அப்படிச் செல்லும்போது மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் காணப்பட்டார். அவரைப் பார்த்ததும் பாலுஸ் தன் எஜமானரிடம், “ஐயா! இந்த அடிமையை நாம் விலைக்கு வாங்குவோம்… இவர் இரண்டாள் வேலையைச் செய்வார்” என்றார். “பாலுஸ்! நீ சுயநினைவோடுதான் பேசுகிறாயா… இந்த ஆளைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது… அப்படியிருக்கும்போது இவர் இரண்டாள் வேலையைச் செய்திடுவார் என்று சொல்கிறாயே… எது எப்படி” என்று இழுத்தார் ப்ரோகுளுஸ்.
“ஐயா! இவரைப் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கின்றது. ஆனால், இவர் இரண்டாள் வேலையைச் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று உறுதியாகச் சொன்னான் பாலுஸ். “சரி, நீ சொல்லிவிட்டாய் என்பதற்காக வாங்குகிறேன்” என்று அடிமைகள் ஏலம் விடப்பட்ட நேரத்த்தில் ப்ரோகுளுஸ், மெலிந்த தேகத்தோடு இருந்த அந்த வயதான அடிமையை விலைக்கு வாங்கிக்கொண்டு போனார்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. பாலுஸ் தன் எஜமானர் ப்ரோகுளுஸிடம் சொன்னதுபோன்றே அந்த அடிமை வந்தபிறகு இருமடங்கு வேலைகள் நடந்தன. இது ப்ரோகுளுஸிற்கு ஆச்சரியமாக இருந்தன. ‘வயதான, அதுவும் மெலிந்த தேகத்தோடு இருக்கும் அந்த மனிதரால் எப்படி இருமடங்கு வேலைகள் நடைபெறுகின்றன?… அது எப்படி என்று பார்த்துவிடுவோம்’ என்று ப்ரோகுளுஸ் அந்த மனிதரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது, நடந்த வேலைகள் அனைத்தும் அந்தப் பெரியவர் செய்யவில்லை…. பாலுஸ்தான் செய்கிறான் என்று. அது மட்டுமல்லாமல், பாலுஸ் மற்ற எல்லா அடிமைகளை விடவும் வயதான அந்த அடிமையை அதிக அக்கறையோடு கவனிப்பதும் தெரியவந்தது.
உடனே ப்ரோகுளுஸ் பாலுசை அழைத்து, “இந்தப் பெரியவர்மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே! இவரென்ன உன்னுடைய தந்தையா?… உறவுக்காரரா?… இல்லை தெரிந்தவரா?” என்றார். அதற்கு பாலுஸ், “இவர் என்னுடைய தந்தையோ, உறவுக்காரோ, தெரிந்தவரோ இல்லை. இவர் எனக்கு எதிரி!… சிறுவயதில் நானும் என்னோடு பிறந்தவர்களும் என் தந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, இவர் எங்களுடைய தந்தையைக் கொன்றுவிட்டு, எங்கள் அனைவரையும் அடிமைகளாக விற்றுவிட்டார்… ஆனாலும் கிறிஸ்தவராகிய எனக்கு இவரை அடிமைச் சந்தையில் பார்த்தபோது பழிவாங்கத் தோன்றவில்லை. மாறாக, இவருக்கு நல்லது செய்யத் தோன்றியது. அதனால்தான் இவரை இங்கு அழைத்துக்கொண்டு வந்து, இவர்மீது தனிப்பட்ட அன்பு கட்டி வருகிறேன்” என்றான்.
பாலுஸ் இவ்வாறு பேசுவதைக் கேட்ட அவனுடைய எஜமானன் ப்ரோகுளுஸ், ‘இப்படியெல்லாம் பகைவர்களை மன்னித்து அன்புசெய்யும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று பாலுசைப் பார்த்து வியந்து நின்றார்.
பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், நம்மை உன்னதக் கடவுளின் மக்களாக வாழவதற்கு அழைப்புத் தருகின்றது. அதற்கு நாம் என்ன செய்வது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
வன்முறைசெய்வோர் கடவுளின் மக்களாக முடியாது
இந்த உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாவது வகையினர், வன்முறையாளர்கள். இப்படிப்பட்டவர்கள் ‘அடித்தால் திரும்பி அடிக்கவேண்டும்’, ‘ஒரு கண்ணை எடுத்தால் பதிலுக்கு ஒரு கண்ணை எடுக்கவேண்டும்’ என்ற மனநிலையோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் வன்முறையால்தான் விடிவு வரும் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தீவிரவாதக் குப்பலை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இவர்களுடைய எண்ணத்தின்படி, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது அல்லது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றால், கண்ணில் விழுந்த முள்ளை முள்ளால் எடுக்குமா?. சாத்தியமில்லைதானே, அதுபோலத்தான் இந்த உலகத்தில் அமைதி பிறக்க வன்முறை ஒருபோதும் தீர்வாக இருக்காது; வன்முறையாளர்கள் உன்னதக் கடவுளின் மக்களாகவும் முடியாது.
எதையும் எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக முடியாது
வன்முறையாளர்கள் ஒருவகையினர் என்றால், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்ற மற்றொரு வகையினராக இருக்கிறார்கள்.
ஒரு பொருளைக் கொடுப்பதிலிருந்து ஒருவரை அன்பு செய்வதுவரைக்கும் இங்கு எல்லாமே எதிர்பார்ப்போடுதான் நடைபெறுகின்றன. நான் உனக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு நீ எனக்கு நல்லது செய்யவேண்டும் என்றும் நான் உன்னை அன்பு செய்கிறேன் என்றால் பதிலுக்கு நீ என்னை அன்பு செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கின்றது போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இப்படி எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் அல்லது அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக இருக்கமுடியாது. இவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல பாவிகள்தான் (6: 32). பாவிகள்தான் அன்பு செய்பவர்களை அன்பு செய்வார்கள்.
பகைவர்களை அன்புசெய்பவர்களே கடவுளின் மக்கள்
வன்முறையாளர்கள், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் வரிசையில் மூன்றாவது வரக்கூடியவர்கள் பகைவர்களையும் அன்பு செய்யக்கூடியவர்கள்; தீமைக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்.
பகைவர்களை அன்புசெய்வது என்பது இந்த உலகத்தின் போக்குக்கு எதிராகச் செல்லக்கூடியது. இது எல்லாராலும் முடியாது. தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றிருக்கின்ற ஒருவரால்தான் முடியும் (உரோ 5:5). அப்படித் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்று, பகைவர்களை அன்புசெய்கின்றபோது அல்லது தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்கின்றபோது, நாம் உன்னதக் கடவுளின் மக்களாகின்றோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஏனெனில் கடவுள்தான் தன்னை வெறுப்போரையும் சபிப்போரையும் அன்பு செய்கின்றவராக இருகின்றார்.
ஆகையால், நம்மை வெறுப்போரையும் நமக்கு எதிராகத் தீமை செய்வோரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக உன்னதக் கடவுளின் அன்பு மக்களாவோம்.
சிந்தனை
“அன்பு ஒன்றும்தான் எதிரியையும் நண்பராக்கும்” என்பார் ஜூனியர் மார்டின் லூதர் கிங். ஆம், தன்னலமற்ற, பிரதிபலன் பாராத அன்பு பகைவரையும் நண்பராக்கும் அதே நேரத்தில் நம்மை உன்னதக் கடவுளின் மக்களாகவும் மாற்றும்
ஆகவே, எல்லாரையும் எந்தவொரு எதிர்பார்ப்பில்லாமல் அன்புசெய்வோம்; தீமை செய்வோருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed