
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.
லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.”
அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
லூக்கா 17: 26-37
“உயிரை இழந்துவிடுபவரும், அதைக் காத்துக்கொள்பவரும்”
நிகழ்வு
பழந்தின்னி வெளவாலால் ஏற்படக்கூடியது ‘நிபா வைரஸ்’. இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு, கேரளாவைச் சார்ந்த பலர் உயிரிழந்தனர். இவ்வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், கோழிக்கோட்டில் உள்ள பெரம்பரா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் நிபா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதாலும், அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர் விரைவில் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருந்தது என்பதாலும் பலலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அருகில் செல்ல மிகவும் அஞ்சினார்கள். இதனால் கேரளா சுகாதாரத் துறையே, நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் கிச்சை அளித்து வந்த ஒருவர்தான் லினி என்ற செவிலியர். இவர் நிபா வைரசால் பதிக்கப்பட்டவர்கள் நடுவில் பணிசெய்துகொண்டிருக்கும்பொழுதே, அந்த வைரசால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இந்த லினிக்கு சித்தார்த், ரிதுல் என்று இரண்டு மகன்கள் உள்ளவர். இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைனில் வேலை பார்த்துவந்தார். இவர் தன் மனைவி லினி, நிபா வைரசால் பாதிக்கப்பட்டுக் கவலைக்கிடமாக இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கக் கேரளாவிற்கு வந்தார். அதற்குள் லினி இறந்துவிடவே, அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. பிள்ளைகளாலும் தன் தாயின் அருகில் செல்ல முடியாமலேயே போய்விட்டது.
ஆம், நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் நடுவில் பணிசெய்தால், உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்தும்கூட லினி என்ற செவிலியர், அவர்கள் நடுவில் பணிசெய்து, அவர்களுக்காகத் தன்னுடைய உயிரையும் இழந்தார். இதனால் அவர் மண்ணுலகைவிட்டுப் பிரிந்தாலும், மக்களுடைய உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
செவிலியரான லினியின் வாழ்க்கை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய, “தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்” என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உயிரைக் காக்க வழிதேடுவோர்
இன்றைய நற்செய்தி வாசகம் மானிட மகனுடைய வருகையின்பொழுது என்ன நடக்கும் என்பதைப் எடுத்துக்கூறினாலும், இரண்டு வகையான மனிதர்களை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தம் உயிரைக் காத்துக்கொள்ள வழிதேடுவோர் ஒருவகையினர். இவ்வகையினரை உலகப்போக்கினாலான வாழ்க்கை வாழ்பவர்களோடு ஒப்பிடலாம். நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று, லோத்துவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று இவர்கள் உண்டும் குடித்தும், இன்ன பிற தீமைகளில் உழன்றும் தங்களுடைய வாழ்வைக் காத்துக் கொள்ள வழிதேடிவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வயிறே தெய்வமாக இருப்பதால், புனித பவுல் சொல்வது போன்று, அழிவே இவர்களின் முடிவாக இருக்கும் (பிலி 3: 19).
தம் உயிரை இழப்பவர்
இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லக்கூடிய இரண்டாவது வகையினர் உலகப் பார்வைக்கு தம் உயிரை இழப்பவராக இருந்தாலும், உம்மையில் தம் உயிரை காத்துக்கொள்பவர். இவர்களை வேறு விதமாகச் சொல்ல வேண்டும் என்றால், இயேசுவின் விழுமியங்களுக்காக, அவர் கண்ட இறையாட்சிக் கனவு நனவாவதற்காகத் தங்கள் உடல், பொருள் ஆவி என அத்தனையையும் தருகின்றவர்கள். இத்தகையோர் இயேசுவின் விழுமியங்களுக்காக தங்களுடைய உயிரை இழந்தாலும், உண்மையில் இவர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்வர்.
யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார்: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24). நம்முடைய வாழ்வும்கூட கோதுமை மணியைப் போன்றுததுதான். என்றைக்கு நாம் நம்முடைய வாழ்க்கையை இழக்கத் துணிகின்றோமா? அன்றைக்கு அதைக் காத்துக்கொள்கின்றோம். என்றைக்கு நாம் நம்முடைய வாழ்க்கைக் காத்துக்கொள்ள விரும்புகின்றோமா? அன்றைக்கு நாம் அதை இழந்துவிடுகின்றோம். ஆகையால், நாம் இயேசுவுக்காக, அவருடைய விழுமியங்களுக்காக நம்முடைய வாழ்க்கையை இழக்கத் துணிவோம். அதன்மூலம் நம்முடைய வாழ்வைக் காத்துக் கொள்வோம்.
சிந்தனை
‘உண்மையான தலைவர்கள் மக்களின் விடுதலைக்காகத் தங்களிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும்’ என்பார் நெல்சன் மண்டலே. மக்கள் தலைவர்கள் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே நம்மிடம் இருப்பதை இயேசுவுக்காக அவருடைய விழுமியங்களுக்காக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதை; ஏன், நம்மையே இயேசுவுக்காக இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed