
பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 9: 51-56
“பகைமையை அல்ல, அன்பை வளர்ப்போம்”
நிகழ்வு
ஜெர்மனியில் உள்ள பாபென்ஹாசென் (Babenhausen) என்ற இடத்திற்குப் பக்கத்தில் ஒரு துறவுமடம் உள்ளது. சுற்றிலும் மரங்கள் நிறைந்த இந்தத் துறவுமடத்திற்கு முன்னால் உள்ள புல்தரையில் இரண்டு மான்கள் தங்களுடைய கொம்புகளால் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிடுவது போன்று ஒரு சிலை உண்டு. அந்தச் சிலை அங்கு இருப்பதற்கான ஒரு வரலாறும் சொல்லப்படுகின்றது.
துறவுமடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது, இரண்டு மான்கள் அந்தப் புல்தரையில் தங்களுடைய கொம்புகளால் ஒன்றின்மீது ஒன்று மிக ஆக்ரோசமாக மோதிக்கொண்டன. இப்படி அந்த இரண்டு மான்கள் ஒன்றின்மீது ஒன்று நீண்ட நேரமாக மோதியதால், கடைசியில் அந்த இரண்டு மான்களும் செத்துப் போயின. இதைப் பார்த்த அந்தத் துறவுமடத்தின் தலைவர், துறவுமடத்திற்கு வரக்கூடியவர்கள், ‘ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், முடிவில் அழிவுதான் ஏற்படும்’ என்ற உண்மையை உணர்ந்துகொள்வதற்கு, மான்கள் இரண்டும் தங்களுடைய கொம்புகளால் ஒன்றின்மீது ஒன்று மோதி சண்டையிடுவது போன்று ஒருசிலையை அங்கு வடித்து வைத்தார்.
இது நடந்து ஒருசில ஆண்டுகள் கழித்து, அந்தத் துறவுமடத்திற்குச் சென்ற அருள்பணியாளர் ஒருவர், துறவுமடத்திற்கு முன்பாக இருந்த புல்தரையில் இரண்டு மான்கள் தங்களுடைய கொம்புகளால் ஒன்று மற்றொன்றின்மீது மோதிக்கொள்வது மாதிரியான சிலையைப் பார்த்துவிட்டு, அது குறித்த விளக்கத்தைத் துறவுமடத் தலைவரிடம் கேட்டபொழுது, அவர் நடந்த எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார். அப்பொழுது அந்த அருள்பணியாளர், கொம்புகள் மாட்டிக்கொண்டு சண்டையிடுவது மாதிரியாக இருந்தச் சிலையை, கையடக்கத்தில் இன்னும் சிறிதாகச் செய்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் கோயிலுக்கும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்தால், மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டு, அன்போடு வாழ்வார்கள் அல்லவா!” என்றார். அருள்பணியாளர் இப்படிச் சொன்னதற்கு ஆமாம் என்பதுபோல் தலையாட்டினார் அந்தத் துறவுமடத் தலைவர்.
ஆம், இன்று பலர் வெறுப்புக்கு வெறுப்பும், வன்முறைக்கு வன்முறையும்தான் தீர்வு என நினைத்துக்கொண்டு, அவற்றின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். உண்மையில், வெறுப்புக்கும் வன்முறைக்கும் அன்பு ஒன்றுதான் தீர்வு என்ற செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பகைமையை வளர்க்க நினைத்த சீடர்கள்
இயேசுவுக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காகச் சமாரியருடைய ஓர் ஊருக்குள் சென்ற தூதர்களை, அவர்கள் ஏற்றுக்கொள்ளாததைக் கண்டு, யாக்கோபும் யோவானும் சீற்றம் கொள்வதையும், இயேசு அவர்களைக் கடிந்துகொள்வதையும் குறித்து இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.
விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வந்ததால், இயேசு எருசலேம் நோக்கிச் செல்கின்றார். அதன் பொருட்டுத் அவர் தூதர்களைத் தனக்கு முன்பாக அனுப்புகின்றார். இப்படிப்பட்ட சூழநிலையில் பல ஆண்டுகளாக யூதர்களோடு பகையோடு இருந்த சமாரியர்கள் இயேசு அனுப்பிய தூதர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு தன் சீடர்களிடம், ‘மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ (லூக் 9: 5) என்று முன்பே சொல்லியிருந்தார். இதனால் சமாரியர்கள் இயேசு அனுப்பி வைத்த தூதர்களை ஏற்றுக்கொள்ளாமல் போனதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லது வேறோர் ஊர் வழியாகப் போயிருக்கலாம். ஆனால், யாக்கோபும் யோவானும், “வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா…?” என்று சொன்னதும், இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.
இங்குச் சீடர்களின் வார்த்தைகள், பகைமையை வளர்க்கக்கூடியதாக இருக்கின்றன. இயேசுவின் செயலோ இதற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.
அன்பை வளர்க்கும் இயேசு
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் பன்னெடுங்காலமாகவே பகையிருந்ததால், கலிலேயாவிலிருந்து எருசலேம் அல்லது யூதேயாவிற்குச் சொல்லும் யூதர் ஒருவர் சமாரியா வழியாகச் செல்லாமல், யோர்தான் ஆற்றங்கரை வழியாகச் செல்வார். இத்தனைக்கும் கலிலேயாவிலிருந்து சமாரியா வழியாகச் சென்றால் தூரம் குறைவாக இருந்தாலும், யூதர்கள் பலர் இதைப் தவிர்ப்பார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு பழசை எல்லாம் நினைவில் கொள்ளாமல், சமாரியர்களின் ஊர் வழியாகச் செல்ல முயல்கின்றார். அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாதபொழுதும்கூட, அவர்களோடு அவர் பகைமையை வளர்க்காமல், பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் வேறோர் ஊர் வழியாகச் செல்கின்றார்.
இங்கு இயேசுவின் சீடர்கள் பகைமையை வளர்க்க நினைத்தாலும், இயேசு அன்பையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கக்கூடியவராக இருக்கின்றார். இயேசு, “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்” (மத் 5: 44) என்றார். அவர் சொன்னது போன்றே பகைவர்களிடம் அன்பு கூர்ந்தார். ஆகையால், நாமும் வெறுப்பையும் பகைமையையும் வளர்க்காமல், இந்த வையகத்தை தழைத்தோங்கச் செய்யும் அன்பை வளர்ப்போம்.
சிந்தனை
‘எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும், எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும் விதைத்திட அருள்புரியும்’ என்று இறைவனிடம் வேண்டுவார் அசிசி நகர்ப் புரிந்த பிரான்சிஸ். ஆகையால், நாம் அசிசி நகர்ப் புனித பிரான்சிசைப் போன்று பகைமைக்குப் பதிலாக அன்பையும், கயமைக்குப் பதிலாக மன்னிப்பையும் விதைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed