
தேவமாதா பிறந்ததின் பேரில்
1-வது தேவமாதா பிறந்த நாளில் பரலோகத்தில் சந்தோஷமும்
2-வது பூலோகத்தில் நம்பிக்கையும்
3-வது நரகத்தில் பயமும் உண்டாயிற்று.
1-வது. பரிசுத்த கன்னிமாமரியாள் குழந்தையாய்ப் பிறந்த நேரத்தில், மற்றப் பெண்களைவிட அன்னை மேற்பட்டவர்களானதினால், திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா சுதன், பரிசுத்த ஆவியானவர் அன்னையை மிகுந்த அன்போடு நேசித்தார்கள். பிதாவாகிய சர்வேசுரன் தமது மிகுதியான அன்புக்குரிய குமாரத்தியாகவும், சுதனாகிய சர்வேசுரன் தாம் மனித அவதாரம் பண்ணும் தேவதாயாராகவும், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தமது இஷ்டப்பிரசாதத்துக்குப் பாத்திரமான தேவாலயமாகவும் கிருபைக் கண்கொண்டு அன்னையை நோக்கினார்கள். சம்மனசுக்களோவெனில், பிறந்திருக்கும் பரிசுத்த குழந்தை தங்களுக்கு இராக்கினியாய் இருப்பாளென்று சந்தோஷப்பட்டு, அன்னை பிறந்த நேரத்தில் அன்னைக்குக் கீழ்ப்படிதலான மேரையாய் அன்னையை ஸ்துதித்து நமஸ்கரிக்கவும் பாராட்டவும் திரளாய் வந்தார்கள். நாமோவென்றால் சர்வேசுரன் இந்தக் குழந்தையின் மேல் வைத்த நேசத்தை வணக்கத்தோடு அனுசரித்து பிறந்த வேளையில் அன்னைக்குக் கையளிக்கப்பட்ட வரப்பிரசாத மிகுதியைக் கண்டு சம்மனசுக்களோடுகூட சந்தோஷித்து இன்று முதல் மரண பரியந்தம் அன்னையின் அடைக்கலத்தில் இருக்க வேண்டுமென மன்றாடக் கடவோம்.
2-வது. சர்வேசுரன் ஆதி மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படியே மனிதர்களை மீட்க ஒரு இரட்சகர் வருவாரென்று 4000 ஆண்டுகளாக மக்களெல்லாரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். பாவத்தினாலே பசாசின் கொடூர அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்த நிர்ப்பாக்கியமான மனிதர்களை இரட்சிக்கிற நேரம் நெருங்கிய பொழுது, பூமியில் பிரகாசத்தையும் செழிப்பையும் பொழிகிற சூரியன் உதிக்கிறதற்கு முன்னர் உதயகாலம் வருகிறது போல பாவத்தின் இருளை நீக்கிச் சகல உயிர்களுக்கும் ஞான ஒளி வீசுகிற நீதியின் சூரியனாகிய சேசுநாதர் பிறக்கிறதற்கு முன்னர் விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய அன்னை கன்னிமாமரியாள் பிறந்தார்கள். நேசத்துக்குரிய தேவமாதா பிறந்த நாளை நினைத்து நம் ஆண்டவளுக்கான வணக்கத்தையும் நம்முடைய தாயாருக்கான அன்பையும் காண்பித்து அவர்களுடைய உதவியையும் ஆதரவையும் மன்றாடுவோமாக.
3-வது. பசாசின் தலையை நசுக்க முன்னர் குறிக்கப்பட்ட கன்னிகை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து இந்த நாளில் பிறந்திருக்கிறார்கள். பிறந்த தேவமாதாவுக்குக் கிடைத்த இஷ்டப் பிரசாதங்களையும் வரங்களையும் பசாசு அறிந்திருந்தால் அதற்கு எவ்வளவு காய்மகாரம் உண்டாகியிருக்கும். மனுமக்களின் எதிரியான பசாசு தான் அடைந்த நிர்ப்பாக்கியத்தில் மனிதரை அமிழ்த்தித் தனக்கு அடிமையாக்கி அவர்கள் நரகத்தில் விழும்படிக்கு வெகு பிரயாசைப் படுகின்றது. ஆனால் மனிதரை இரட்சிக்க வருகிற சேசுக்கிறிஸ்து நாதரின் நேச அன்னை இந்த பசாசின் தலையை நசுக்கியிருக்கிறதினால் அதற்கு மகா பலவீனம் வந்தது சரியே. ஆகவே நாமெல்லாரும் பலவீனப்பட்ட பசாசுக்குப் பயப்படாமல், சோதனை வேளையில் அதை நாம் வெல்லும்படியாக மகா பரிசுத்த கன்னிகையிடம் மிகுந்த நம்பிக்கையோடு வேண்டிக்கொள்வோம்.
செபம்
நேசத்துக்குரியவர்களாய்ப் பிறந்த கன்னிமரியாயே வாழ்க! நீதி சூரியனுக்கு முன் உதிக்கிற விடியற்காலத்து நட்சத்திரமே வாழ்க, நீர் பிறந்த நேரத்தில் உம்முடைய திருப்பாதத்தைத் தாள் பணிந்து வணக்கத்தோடு உம்மை ஸ்துதித்து என்னை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். எங்களுக்குப் பூரண ஞானபாக்கியத்தைக் கொடுக்கப் பிறந்தவர்கள் நீரே : துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவும் பலவீனர்களுக்கு வல்லமையும், பாவிகளுக்கு அடைக்கலமும் சகல நிர்ப்பாக்கியர்களுக்குத் தஞ்சமும் நீரே. சர்வேசுரன் என் பாவங்களின் பாரத்தைப் போக்கி, என் ஆத்துமத்தின் ஞான அந்தகாரத்தை நீக்கி, என் துர்க்குணங்களையெல்லாம் சீர்ப்படுத்தி, என் சத்துருக்கள் கையில் நின்று என்னை இரட்சிக்கும்படிக்கு நீர் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அப்போது உம்முடைய ஆதரவை அடைந்து தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு இந்த உலகில் நல்வழியில் நடந்து மோட்ச இராட்சியத்தில் சேருவேன் என நம்பிக்கையாய் இருக்கிறேன்.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க! இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.
மூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
தேவமாதாவைக் குறித்து ஓர் பிணியாளனைச் சந்தித்து ஆறுதல் சொல்லுகிறது.
Source: New feed