I எசாயா 40: 1-5, 9-11
II 2 பேதுரு 3: 8-14
III மாற்கு 1: 1-8
மாபரன் இயேசுவும் வருகையும், மனம் மாற்றமும்
நிகழ்வு
கொலைகாரன் ஒருவன் இருந்தான். அவன் தன் கண்ணில் பட்ட ஆண், பெண், சிறியவர், பெரியவர் என யாவரையும் வெட்டிச் சாய்த்தான். இதனால் அவன் வருவது தெரிந்தால், மக்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.
ஒருநாள் அவன் தன்னுடைய குதிரையில் வேகமாக வருவதைக் கண்டு மக்கள் அனைவரும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். ஒரு துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்தார். எல்லாரும் ஓடி ஒளிந்தபொழுது, துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்ததைக் கண்டு, கடுஞ்சீற்றம் அடைந்த அந்தக் கொலைகாரன் துறவியிடம், “என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நான் என் வாளை வீசினால், எனக்கு முன்பாக நிற்பவர் யாராக இருந்தாலும், இரண்டு துண்டுகளாகச் சரிந்து கீழே விழுவார்” என்றான். அதற்கு அந்தத் துறவி, “என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் என் பார்வையாலேயே எனக்கு முன்பாக இருக்கக்கூடியவரைச் சாய்க்கக் கூடியவன்” என்றார்.
துறவி இப்படிச் சொன்னதும், அந்தக் கொலைகாரன் தன்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். பின்னர் அவன், துறவியின் காலில் போய் விழுந்து, “இத்தனை நாள்களும் நான் ஒரு மிகப்பெரிய கொலைகாரனாய் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் நான் மனம்திருந்தி நடக்க விரும்புகின்றேன். அதனால் என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். துறவியும் அவனைத் தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொள்ள, அவன் புதிய மனிதனாக வாழத் தொடங்கினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற மிகப்பெரிய கொலைகாரன் துறவியின் அமைதியான தோற்றத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு மனம்மாறினான். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக, மனம்மாறி அவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனம் மாற்றம் காலத்தின் கட்டாயம்
திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்யும் வகையில், மனம் மாற்றம் அடையவேண்டும் என்ற செய்தியைத்தான் தாங்கி வரும். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் அத்தகைய செய்தியைத்தான் தாங்கி வருகின்றது.
நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் வருகைக்காகத் திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். மெசியாவின் வருகைக்கு முன்பாக, தூதர் ஒருவர் தோன்றி மக்களைத் தயார் செய்வார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது (விப 23: 20; எசா 40: 3; மலா 3:1). அதுவே திருமுழுக்கு யோவானின் வழியாக நடந்தது. இந்தத் திருமுழுக்கு யோவான் மக்களிடம் மனம் மாறவேண்டும் என்றோர் அழைப்பு விடுத்தார். அந்த மனம்மாற்றம் என்பது பெயரளவில் மட்டும் இருக்காமல், செயல்வடிவிலும் இருக்கவேண்டும் என்பதற்காக, “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 8) என்றார். ஆதலால், நாம் மெசியாவாம் இயேசு கிறிஸ்துவின் வருக்கைக்கு நம்மையே நாம் தயார்செய்வதற்கு மனம் மாற்றம் அடைவது காலத்தின் கட்டாயமாக, இன்றியமையாததாக இருக்கின்றது.
மனம்மாறுவதற்காகப் பொறுமையோடு இருக்கும் இறைவன்
மனம் மாற்றம் மிகவும் இன்றியமையாதது என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புனித பேதுரு, நாம் மனம் மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்கின்றார்.
தொடக்கத் திருஅவையில் இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழும் என்றொரு நம்பிக்கை இருந்தது; ஆனால், இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழாதபொழுது, ஒருசிலர் இயேசுவின் இரண்டாம் வருகையைக் கேள்விக்குள்ளாகினார்கள். அப்பொழுதுதான் புனித பேதுரு அவர்களிடம், “ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார்” என்கின்றார்.
கடவுளின் விரும்ப மெல்லாம், இறைவாக்கினர் எரேமியா கூறுவது போல, தீயோர் சாக வேண்டும் என்பது கிடையாது; மாறாக அவர்கள் தம் தீய வழியினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே ஆகும் (எரே 33: 11). இதையேதான் புனித பேதுரு தன்னுடைய திருமுகத்தில் வலியுறுத்திக் கூறுகின்றார். ஆகவே, நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு இருக்கும்; நாம் வாழவேண்டும் என்று விரும்பும் கடவுளிடம், நாம் மனம்மாறிச் செல்வது சிறப்பானது.
மனம்மாறுவோருக்கு இறைவன் வெற்றிப் பரிசை அளிப்பார்
நாம் மனம் மாறவேண்டும் என்றும், நாம் மனம்மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்றும் இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது நாம் மனம்மாறி இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்கின்றபொழுது நமக்கு என்னென்ன ஆசிகள் கிடைக்கும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, அறுபது ஆண்டுகள் அன்னிய மண்ணில் அடிமைகளாக வாழ்ந்து வந்த யூதேயா நாட்டினருக்கு ஆண்டவராக கடவுள் ஆறுதலின் செய்தியை உரைப்பதாக இருக்கின்றது. யூதேயா நாட்டினர் தாங்கள் செய்த தவற்றினாலேயே நாடு கடத்தப்பட்டனர் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா, கடவுள் அவர்களுடைய குற்றத்தை மன்னித்து விட்டார் என்றும், தங்களுடைய வழிகளை – வாழ்க்கையை – சீரமைத்துக்கொண்டு தங்கள் நாட்டிற்கு அவர்கள் திரும்பிச் செல்லும்பொழுது, ஆண்டவரின் மாட்சி அவர்களிடம் வெளிப்படும் என்றும், ஆண்டவர் தம் வெற்றிப் பரிசை அவர்களுக்குத் தருவார் என்றும், ஓர் ஆயரைப் போன்று அவர்களை அவர் மேய்ப்பார் என்றும் கூறுகின்றார்.
முதல் வாசகம், தங்களுடைய வழிகளைத் திருத்திக்கொண்டு, தங்களது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் யூதேயா நாட்டிற்குக் கிடைக்கும் ஆசிகளை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும், மனம் மாறி, ஆண்டவருக்கு உகந்த வழியில் நாம் நடக்கும்பொழுது கிடைக்கும் ஆசிகளை மறைமுகமாக எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. ஆகையால், நாம் மனம்மாறுவதற்குப் பொறுமையோடு இருக்கும் ஆண்டவரிடம் மனந்திருந்தி வந்தால், அவருடைய மாட்சியைக் கண்டு, அவர் அளிக்கும் வெற்றிப் பரிசினைப் பெற்று, அவருடைய ஆடுகளாவோம் என்பது உறுதி. இத்தகைய ஆசிகளை நாம் பெற மனம் மாறத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘குழந்தை இயேசு கோடிகணக்கான குடில்களில் பிறந்துவிட்டு, நம்முடைய உள்ளத்தில் பிறக்கவில்லை எனில், அதனால் எந்தவொரு பயனும் இல்லை’ என்பார் அலெக்சாண்டர் போப் என்ற அறிஞர். ஆதலால், இயேசு நம்முடைய உள்ளத்தில் பிறக்கும் வகையில், நாம் மனம்மாறி, நம்முடைய உள்ளத்தை இறைவன் தங்கும் இல்லடமாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed