
ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட குடும்பம் அசைவுறாது
நிகழ்வு
நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. ஒருநாள் மாலைவேளையில், வேலையை முடித்துக்கொண்டு மிகவும் களைப்போடு வீட்டிற்குத் திரும்பிய கலாமின் தாயார் ஆஷியம்மா, தன்னுடைய கணவர் ஜெய்னுலாய்தீனும் பிள்ளைகளும் மிகவும் பசியோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவரச அவரசமாக அவர்களுக்கு ரொட்டி சுட்டித் தந்தார். தான் சுட்ட ரொட்டிகளை ஆஷியம்மா முதலில் தன் கணவருக்குத் தான் வைத்தார்.
அவர் சுட்ட ரொட்டிகள் மிகவும் கருகிப் போயிருந்தன. ஆனாலும் கலாமின் தந்தை அவற்றைப் பற்றி எதுவும் சொல்லாமல், சுவைத்துச் சாப்பிட்டார். கலாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் தான் சுட்டுத் தந்த ரொட்டிகள் கருகிப் போகியிருப்பதை அறிந்த ஆஷியம்மா தன்னுடைய கணவரிடத்தில் வந்து, “தெரியாமல் நடந்துவிட்டது; மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஜெய்னுலாய்தீன் அதற்கு, “பரவாயில்லை; எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் சிறுவன் கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் கலாமும் அவருடைய உடன்பிறப்புகளும் தங்களது தாயார் சுட்டுத் தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார்கள். தூங்கும்பொழுது எப்பொழுதும் தன் தந்தையருகே தூங்கும் கலாம் அவரிடம், “அப்பா! உங்களுக்குக் கருகிய ரொட்டி பிடிக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். பிறகு எதற்கு அம்மா கருகிய ரொட்டிகளைச் சுட்டித் தந்தபொழுது, ‘எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்’ என்று சொன்னீர்கள்” என்றார். “மகனே கலாம்! உன் அம்மா பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மிகவும் களைப்போடு வந்து உணவு தயாரிக்கின்றார். அப்படியிருக்கும்பொழுது, அவர் தயாரித்துத் தரும் உணவில், எப்போதாவது கருகிப்போய் வரும் ரொட்டியைப் பெரிதுபடுத்துவதா..? மேலும் கருகிப்போய் வரும் ரொட்டி என்னைக் காயப்படுத்தாது; ஆனால் நான் பயன்படுத்தும் கடினமான வார்த்தைகள் உன் அம்மாவைக் காயப்படுத்தும் அல்லவா! அதனால்தான் நான் உன் அம்மாவிடம் அவ்வாறு சொன்னேன்” என்றார் கலாமின் தந்தை.
ஆம், குடும்பமாக வாழும் நாம், குடும்பத்தில் இருக்கின்ற ஒருவர் செய்யும் தவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவரைப் பொறுத்துக்கொண்டு, மன்னித்து (கொலோ 3: 13) ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது, அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறெதுவும் இல்லை. இன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று நாம் கொண்டாடுகின்ற இத்திருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
வீட்டுக்கு வீடு வாசற்படி!
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனை உண்டு என்பதை உணர்த்துவதற்காக, ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற சொல்வழக்கைப் பயன்படுத்துவது உண்டு. ஆம், நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், இந்த உலகத்தில் பிரச்சனை இல்லாத குடும்பமே கிடையாது என்று சொல்லிவிடலாம். இதற்கு நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்கிய ஆபிரகாமின் குடும்பமும் திருக்குடும்பமும் கூட விதிவிலக்கில்லை.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தின் முதல் பகுதியில் (தொநூ 15: 1-6), ஆண்டவர் சொல் கேட்டு, தன்னுடைய சொந்த ஊரையும் உறவுகளையும் விட்டுவிட்டு ஆண்டவர் காட்டிய இடத்திற்குப் போன ஆபிரகாம், “எனக்குக் குழந்தை இல்லையே!” என்று சொல்வதை நாம் வாசிக்கின்றோம். குழந்தைப் பேறு என்பது ஆண்டவர் ஒருவருக்கு அளிக்கின்ற மிகப்பெரிய பேறு. அது ஆபிரகாமிற்கு அவருடைய தொண்ணூற்று ஒன்பதாவது வயதுவரை இல்லாமல் இருந்ததால், அது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கும்.
நற்செய்தியில், குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவும், அவருடைய கணவர் யோசேப்பும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க எடுத்துச் சொல்லும்பொழுது, அதைத் தன் கையில் ஏந்தும் சிமியோன், “இக்குழந்தை …எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அவர் மரியாவை நோக்கி, “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்பார். இது இயேசு, மரியா, அவர்களோடு சேர்ந்து யோசேப்பும் கடவுளின் மீட்புத் திட்டத்தின் பொருட்டு அடைய இருந்த துன்பங்களை முன்னறிவிப்பதாக இருக்கின்றது. இதை வைத்துப் பார்க்கின்றபொழுது திருக்குடும்பத்திலும்கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல் இல்லை என்று சொல்லலாம்.
ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்தல்
நம்பிக்கைக்குக் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆபிரகாமின் குடும்பத்திலும், இயேசு, மரியா, யோசேப்பு இருந்த திருக்குடும்பத்திலும் கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இருந்தன என்று பார்த்தோம். இவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். ஆபிரகாம் தனக்குக் குழந்தை இல்லையே என்று வருந்தாமல், “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்…” (தொநூ 12: 2) என்று ஆண்டவர் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தார். இதனால் அவர் நம்பியது போன்றே, அவர் வழியாகப் பெரிய இனம் தோன்றியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர்த் திருமுகத்தின் ஆசிரியர், “நம்பிக்கையால்தான்” என்று கூறுகின்றார்.
திருக்குடும்பத்திலிருந்த இயேசு, மரியா, யோசேப்பும்கூட தங்களுடைய வாழ்வில் பல்வேறு துன்பங்கள், பிரச்சனைகள் வந்தபொழுதும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின்படி நடந்து அசைவுராமல், பதற்றமடையாமல் (எசா 28: 16) இருந்தார்கள்.
தன்மீது நம்பிக்கை கொண்டோரின் குடும்பங்களை ஆசிகளால் நிரப்பும் ஆண்டவர்
ஆபிரகாமின் குடும்பத்திலும், திருக்குடும்பத்திலும் பிரச்சனைகளும் துன்பங்களும் இருந்தாலும், அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால்தான் அசைவுராமல் இருந்தார்கள் எனில், குடும்பமாக வாழக்கூடிய நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கையும், ஒருவர் மற்றவரிடம் அன்பும் கொண்டு வாழ்ந்தோமெனில், நம்முடைய குடும்பமும் திருக்குடும்பமாக மாறும் என்பது உறுதி.
இன்றைக்கு உள்ள குடும்பங்களில் கணவன் மனைவியிடம், பெற்றோர் பிள்ளைககளிடம் நல்லுறவு இல்லை. குடும்பத்தில் நல்லுறவு ஏற்பட வேண்டுமெனில், அக்குடும்பம் அன்பில் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதற்காகத்தான் புனித பவுல், “இவையனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்” (கொலோ 3: 14) என்பார். ஆகையால், நாம் அனைத்திற்கும் மேலாக அன்பையும், ஆண்டவரின்மீது நம்பிக்கையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக நம்முடைய குடும்பத்தைத் திருக்குடும்பம் ஆக்குவோம்.
சிந்தனை
‘குடும்பங்கள் எப்படியோ அப்படியே சமூகம்’ என்பார் தேயர் என்ற அறிஞர். ஆகையால், நாம் நம்முடைய குடும்பங்களைத் திருக்குடும்பங்களாக, நல்ல குடும்பங்களாகக் கட்டியெழுப்பி, சமூகத்தை இறைச் சமூகமாக உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed