
யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27
அக்காலத்தில்
இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார்.
அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். ‘மனிதரிடமிருந்து’ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
மத்தேயு 21: 23-27
“விண்ணிலிருந்து வரும் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடப்போம்?”
நிகழ்வு
யூத இரபியான சாமுவேல் என்பவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
ஒருமுறை இரபி சாமுவேல் உரோமைக்குச் சென்றிருந்தார். அவர் அங்குச் சென்றிருந்த நேரம், உரோமை அரசியின் விலையுர்ந்த காப்பு (Bracelet) தொலைந்து போயிருந்தது. இதனால் அவர் நாட்டு மக்களிடம், “யாராவது தொலைந்துபோன என்னுடைய காப்பை முப்பது நாள்களுக்குள் கண்டுபிடித்துத் தந்தால், அவர்களுக்குத் தக்க சன்மானம் கிடைக்கும். அதே நேரத்தில் என்னுடைய காப்பை முப்பது நாள்களுக்குப் பின் தந்தால், அவர்களுக்குச் சரியான தண்டனை கிடைக்கும்” என்று அறிவிப்புக் கொடுத்தார்.
அரசி இப்படியோர் அறிவிப்பைக் கொடுத்த ஓரிரு நாள்களிலேயே உரோமைக்குச் சென்றிருந்த இரபி சாமுவேல், தொலைந்துபோன அரசியின் காப்பைக் கீழே கண்டெடுத்தார். இருந்தாலும் அவர் அதை உடனடியாக அரசியிடம் கொடுக்காமல், தன்னிடத்தில் வைத்திருந்து, முப்பது நாள்கள் கழித்தே கொடுத்தார்.
அப்பொழுது அரசி இவரிடம், “தொலைந்துபோன இந்தக் காப்பை யாராவது கண்டெடுத்தால், முப்பது நாள்களுக்குள் என்னிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்புக் கொடுத்திருந்தேனே! இது உனக்குத் தெரியாதா?” என்றார். “தெரியும்” என்று இரபி சாமுவேல் சொன்னதும், “அப்படியானால் இதை ஏன் நீ என்னிடத்தில் முப்பது நாள்களுக்குள் ஒப்படைக்கவில்லை” என்று சீறினார் அரசி. இதற்கு இரபி சாமுவேல், “நான் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவருடைய அதிகாரத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்பவன். ஒருநாள் நான், நீங்கள் அறிவித்தது போன்று இந்தக் காப்பை முப்பது நாள்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்திருந்தால், நான் உங்களுக்கு அஞ்சி, உங்களுடைய அதிகாரத்திற்குக் கட்டுப் பட்டு நடப்பவன் போல் ஆகிவிடும். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அரசி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றப்படுவாராக?” என்றார்.
ஆம், இரபி சாமுவேல் ஆண்டவரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தார்; ஆனால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், ஆண்டவர் அருளிய அதிகாரத்தோடு போதித்த திருமுழுக்கு யோவானையும் இயேசுவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய நற்செய்தி வாசகத்தில், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?” என்று தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு அவர் என்ன பதிலளித்தார் என்பது பற்றியதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முந்தைய பகுதியில் இயேசு, எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்திருப்பார். இதனாலேயே எருசலேம் திருக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் இயேசுவிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்…?” என்று கேள்வி கேட்கின்றனர்.
இயேசு அவர்களிடம், கடவுள் எனக்கு எல்லா அதிகாரத்தையும் அருளியிருக்கின்றார் (மத் 28: 17) என்று நேரடியாகவே பதில் சொல்லியிருக்கலாம்; ஆனால், அவர் கேள்வி கேட்டவரிடம் பதில் கேள்வி கேட்டு, அவர்களுக்குப் பதிலளிக்கின்றார்.
விண்ணகத்திலிருந்து வந்த அதிகாரம்
தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் அதிகாரம் தொடர்பான கேள்வியை இயேசுவிடம் கேட்டபொழுது, அவர் அவர்களிடம், “யோவானுக்குத் திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?” விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்.
இயேசு அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் எப்படிப் பதில் சொன்னாலும், மாட்டிக் கொள்வோம் என்பதால் அவர்கள், “எங்களுக்குத் தெரியாது” என்கின்றார்கள். உண்மையில் யோவானுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரமும், இயேசு எல்லா வல்ல செயல்களைச் செய்வதற்குமான அதிகாரமும் விண்ணகத்திலிருந்தே வந்தது. இதை பரிசேயர்கள் உணரவும் இல்லை; அவர்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
இன்றைக்கு ஆண்டவர் கொடுத்த அதிகாரத்தோடு நம் நடுவே இறைப்பணிசெய்து கொண்டிருக்கின்ற அருள்பணியாளர்களை, இறையடியார்களை நாம் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்கின்றோமா? அவர்கள் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்டு, அதன்படி நடந்து, ஆண்டவருக்கு உகந்தவர்களாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
‘கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’ (யோவா 6: 29) என்பார் இயேசு. எனவே, நாம் யூதர்களைப் போன்று கடவுள் அனுப்பிய திருமுழுக்கு யோவானையும், இயேசுவையும் புறக்கணித்துக்கொண்டு இருக்காமல், அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய போதனைகளின் படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed