
பொதுக்காலம் முதல் வாரம்
சனிக்கிழமை
I எபிரேயர் 4: 12-16
II மாற்கு 2: 13-17
“நமது வலுவின்மையைக் கண்டு இரங்கும் இயேசு”
தவறு செய்த தன் உதவியாளரிடம் இரக்கம்காட்டிய நிதியமைச்சர்
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் (William Ewart Gladston 1809-1898). இவர் இங்கிலாந்தின் நிதியமைச்சராக இருந்தபொழுது, நிதியறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பு, தன் உதவியாளரை அழைத்து, அதைச் சரிபார்க்கச் சொன்னார். அவரும் அதைச் சரிபார்க்கும்பொழுது, அவரை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய பிழையைச் செய்துவிட்டார். தன்னுடைய உதவியாளர் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு, வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் நிதியறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் அது செய்தித்தாளிலும் வெளிவந்தது.
இத்தவற்றை எப்படியோ ஒரு செய்தி நிறுவனம் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, அது வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதற்குப் பின் ஒருநாள் வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன், தன் உதவியாளரை அழைத்தார். ‘தன்னால்தான் தன்னுடைய தலைவருக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக அவர் என்ன செய்யப்போகிறாரோ?’ என்று உதவியாளர் அஞ்சியவாறு, அவரிடம் சென்றபொழுது, வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் அவரிடம், “இந்த முறை தவறு நடந்ததற்காக வருந்தவேண்டாம். இத்தனை முறையும் நீ எனக்கு நல்லவிதமாய்ப் பணிசெய்திருக்கின்றாய். அதற்கு நன்றி செலுத்துவதற்குத்தான் உன்னை அழைத்தேன்” என்று அவரிடம் மிகவும் கனிவோடு பேசினார்.
தன் உதவியாளர் தவறு செய்து, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியபொழுது வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் அவரைத் தண்டியாமல் அவர்மீது இரக்கம் காட்டினார். இன்றைய இறைவார்த்தை இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டுகிறவர் என்ற செய்தியைத் தருகின்றது.
திருவிவிலியப் பின்னணி
எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், தலைமைக் குருவாம் இயேசு, நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டாதவர் அல்லர்; மாறாக, அவர் நம்மீது இரக்கம் காட்டுபவர் என்கின்றது. இயேசு, மனிதரின் வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டுபவர் என்பதற்குச் சான்றாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, யூதர்கள் பாவி என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றும் அழைத்த வரிதண்டுபவரான லேவியை – மத்தேயுவைத் – தன் பணிக்கென அழைக்கின்றார். இவ்வாறு இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரங்குபவர் ஆகின்றார்.
சிந்தனைக்கு:
சமூகத்தில் உள்ள வறியவர்கள், வலுக்குறைந்தவர்கள், ஏழைகள் மட்டில் நம்முடைய நிலைப்பாடு என்ன?
இயேசு தன்னை அழைத்ததும், அவர் பின்சென்ற மத்தேயுவைப் போன்று, நம்மால் இயேசுவின் பின் செல்ல முடிகின்றதா?
கடவுள் தகுதியானவர்களை அழைப்பதில்லை; அழைத்தவர்களைத் தகுதியுள்ளவராக்குகின்றார்.
இறைவாக்கு:
‘இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடம் மகன் வந்திருக்கின்றார்’ (லூக் 19: 10) என்பார் இயேசு. நாம் இயேசுவைப் போன்று வறியவர்களையும் எளியவர்களையும் தேடிச் சென்று, அவர்களுக்கு நல்வாழ்வு தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
81Sharon, நட்புடன் அஜிமோன் and 79 others
13 Comments
13 Shares
Like
Share
Source: New feed