
இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46
அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், ” `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மறையுரைச் சிந்தனை
அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்
புத்தருடைய நெடுநாளையச் சீடன் அவன். ஒருநாள் புத்தர் அவனிடத்தில், “உன்னுடைய வயது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “என்னுடைய வயது ஐந்து” என்றார்.
கேள்விகேட்ட புத்தர் ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் நின்றார். பின்னர் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “உன்னைப் பார்த்தால் அறுபதிலிருந்து எழுபது வயது உள்ளவர் போன்றுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது வெறும் ஐந்து வயதுதான் என்று சொல்கிறீரே, இது என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “என்னுடைய உடல் வயது எழுபது இருக்கலாம். ஆனால் என்னுடைய உண்மையான வயது ஐந்துதான். ஏனென்றால் இந்த ஐந்து ஆண்டுகள்தான் நான் பல்வேறு தவமுயற்சிகள், ஒருத்தல்முயற்சிகள் வழியாக என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, எதற்காக இந்த பூமியில் நான் பிறந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்கிறேன்” என்றார்.
எவன் ஒருவன் தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு வாழ்கிறானோ, அவனே உண்மையான மனிதன் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகிறார். நிலக்கிழார் ஒருவர் நன்றாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை, குத்தகைக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நெடும்பயணம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு குத்தகைப்பணத்தை அவர்களிடம் இருந்து வாங்குவதற்காக தன்னுடைய பணியாளர்களை நிலக்கிழார் அனுப்புகிறார். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ நிலக்கிழார் அனுப்பிய பணியாளர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள்; ஒருசிலரை கொலைசெய்கிறார்கள். இதனால் கடுஞ்சினம்கொண்ட நிலக்கிழார் அந்த கொடிய குத்தைகைக்காரர்களிடமிருந்து திராட்சைத் தோட்டத்தை எடுத்து வேறொருவரிடம் கொடுக்கிறார்.
இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரேயல் மக்களுக்கு வளமிக்க நாட்டைக் கொடுத்தார்; அவர்களைச் சிறப்பாகப் பராமரித்து வந்தார். ஆனால் அவர்களோ உண்மையான கடவுளை மறந்து, வேற்று தெய்வத்திருக்குப் பின்னால் சென்றார்கள்; தீச்செயலிலே மூழ்கிப்போனார்கள். இதனால் சினம்கொண்ட கடவுள் அவர்களைத் தண்டிக்கிறார்.
இஸ்ரயேல் மக்களைப் போன்றுதான் நமக்கும் கடவுள் ஏராளமான வாய்ப்பு, வசதிகளை, திறமைகளைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு நாம் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 15:8 ல் வாசிக்கின்றோம், “நீங்கள் மிகுந்த கனிதந்து என்னுடைய சீடராக இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது” என்று. ஆகவே நாம் ஒவ்வொருவரும் கனிதரும் மக்களாகவும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
“வாழ்க்கையை ஒரு சிறு மெழுகுவர்த்தியாக நான் கருதவில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்காலச் சந்ததியாருக்குக் கொடுக்கும் முன் எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க விரும்புகிறேன்” என்பார் பெர்னாட்ஷா என்ற அறிஞர். அதேபோன்று “அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டே நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதுதான் வாழ்க்கை முறை” என்பார் மேக்கனல் என்ற அறிஞர்.
ஆகவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்வென்னும் கொடையை அர்த்தமுள்ளதாக்குவோம், பிறர் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.
Source: New feed