
நீங்கள் பேறுபெற்றோர்!
இது விற்பனைக்கல்ல:
சிறுவன் ஒருவன் தன் தந்தையோடு அருஞ்காட்சியத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக் கொண்டு வரும்போது, பழங்காலத்து நாணயம் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
உடனே அவன் அங்கிருந்த பணியாளரிடம், அந்தப் பழங்காலத்து நாணயத்தைக் காட்டி, “இது எனக்கு வேண்டும்? இதன் விலை எவ்வளவு?” என்றான். பணியாளர் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவராய், “உன்னிடத்தில் எவ்வளவு பணம் இருக்கின்றது?” என்றார். “ஐம்பது ரூபாய்” என்று சிறுவன் சொன்னதும், “ஐம்பது ரூபாய்க்கெல்லாம் இதை வாங்க முடியாது. ஏனெனில், இது விலைமதிக்கப்பெறாத பொக்கிஷம். மேலும், இது விற்பனைக்கல்ல. இன்னொரு முக்கியமான செய்தி, நீ இந்த நாட்டுக் குடிமக்களுள் ஒருவராய் இருப்பதால், ஒருவகையில் இது உனக்குச் சொந்தம்” என்றார். இதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தான்.
அருஞ்காட்சியத்தில் இருந்த அந்தப் பழங்காலத்தை நாணத்தைக் கடவுள் அளிக்கும் பேறுபெற்றவர் என்ற பட்டத்தோடு ஒப்பிடலாம். எப்படிப் பழங்காலத்து நாணயத்தை எவ்வளவு விலைகொடுத்தாலும் வாங்க முடியாதோ, அப்படிப் கடவுள் அளிக்கும் பேறுபெற்றவர் என்ற பட்டத்தினை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. அதுபோல, பேறுபெற்றவர் என்ற பட்டம் பழங்காலத்து நாணயத்தைப் போன்றே விற்பனைக்கல்ல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருநாட்டின் குடிமகனாகும்போது எப்படிப் பழங்காலத்து நாணயம் ஒருவகையில் ஒருவருக்குச் சொந்தமாகின்றதோ, அப்படி நாம் கடவுளின் மக்களாகும்போது பேறுபெற்றோர் என்ற பட்டம் நமக்குச் சொந்தமாகின்ற்து.
பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் பேறுபெற்றவர்களாகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
உண்மையான பேறு:
முக நூல், வலையொளி போன்ற சமூக ஊடகங்களில் ‘Paid Promotion’ என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அடிப்படையில் ஒன்றுமில்லாதை ஊதிப் பெரிதாக்கும் செயல்தான் இது! இன்றைக்கு ஒருசிலர் தங்களிடமிருக்கும் பண பலத்தைக் கொண்டும், அதிகாரத்தைக் கொண்டும் தாங்கள் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் அல்லது பணம் இருந்தால் போதும், அதிகாரம் இருந்தாலும் போதும் அவர் ‘பெரியவர்’ என்றொரு நிலை கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் பணமும் அதிகாரமும் ஆள்பலமும் அறிவும் இருந்தால், அவர் பெரியவர் அல்லது பேறுபெற்றவர் ஆகிவிட முடியுமா? என்றால் இல்லை என்கிறது இன்றைய இறைவார்த்தை.
மலைமேல் ஏறி அமர்ந்து, திருவாய் மலருகின்ற இயேசு, ஏழையின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், தன் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் “பேறுபெற்றோர்” என்கிறார். இயேசு சொல்லும் இந்தப் பேறுபெற்றோர் பட்டியலில், பணமும் அதிகாரமும் அறிவும் ஆள்பலமும் கொண்டவருக்கு இடமில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. எனில், இவ்வுலக செல்வமும் அதிகாரமும் அறிவும் ஒன்றுமே இல்லை; அதெல்லாம் உண்மையான பேறு இல்லை. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, ஏழையரின் உள்ளத்தோராய், கனிவுடையோராராய் வாழ்வதுதான் உண்மையான பேறு என்பதை இயேசு மிக அழகான எடுத்துக்கூறுகின்றார்.
ஆண்டவரைத் தேடுவோருக்குப் புகலிடம்:
இறைவாக்கினர் செப்பனியா கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைவாக்கு உரைத்தவர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால். கி.மு.631 ஆம் ஆண்டு, யோசியா மன்னன் சமயச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குப் பத்து ஆண்டுகளுக்கு இறைவாக்கு உரைத்தவர். இவர், மக்கள் உண்மைக் கடவுளை மறந்து வேற்று தெய்வங்களை வழிபட்டதால், எருசலேமிற்கு வரவிருந்த அழிவினைப் பற்றி இறைவாக்கு உரைத்தாலும், கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடிவோருக்கும் அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோருக்கும் கிடைக்கும் ஆசிகளைப் பற்றி இறைவாக்கு உரைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அவர், “ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்! ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்” என்கிறார். செப்பனியா உரைத்த இறைவாக்கு யூதர்களின் வரலாற்றில் நடந்தேறியது. பாபிலோனியர்கள் எருசலேமின்மீது படையெடுத்து வந்தபோது, மற்றவர்களை அவர்கள் நாடு கடத்தியபோது, நாட்டில் இருந்த வறியவர்களும் எளியவர்களும், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்களும் அப்படியே விட்டுவிடப் பட்டார்கள். எனவே, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவதையும், அத்தகையோருக்கு அவர் புகலிடம் தருவார் என்பதையும் நாம் நமது மனத்தில் இருத்த வேண்டும்.
Source: New feed