
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கும், வளாகத்திற்கும், வருகைதரும் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இத்தாலியக் காவல்துறையின் வத்திக்கான் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவோரையும், அவர்களின் குடும்பத்தினரையும், இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1929ம் ஆண்டு வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே இலாத்தரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில், 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தாலி காவல்துறையின் வத்திக்கான் பாதுகாப்பு பிரிவு துவக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு கொண்டாடப்படும் நிலையில், இப்பிரிவில் பணியாற்றுவோரை திருத்தந்தை சந்தித்து, தன் வாழ்த்துக்களைக் கூறினார்.
உரோம் நகரை 1943ம் ஆண்டு ஆக்கிரமித்த ஜெர்மன் துருப்புக்களால் எழுந்த பிரச்னைகளையும், அதனைத் தொடர்ந்து வத்திக்கான் வளாகம், மற்றும், திருப்பயணிகள் குறித்து எழுந்த அக்கறையையும் சுட்டிக்காட்டி, இந்த காவல்துறை பிரிவு துவக்கப்பட்டதைக் குறித்த வரலாற்றை திருத்தந்தை நினைவூட்டினார்.
வத்திக்கான் வளாக பாதுகாப்பிலும், வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகளின் பாதுகாப்பிலும் அக்கறையுடனும், தியாக உணர்வுடனும் செயல்பட்டுவரும் இப்பிரிவின் இத்தாலியக் காவல்துறையினருக்கு தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed