அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், மெக்சிகோ நாட்டிற்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும், இஸ்பெயின் மற்றும், மொரோக்கோ நாடுகளுக்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும் இடம்பெற்றுள்ள கடுந்துயரில் பல புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 28, இச்செவ்வாயன்று தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
டெக்சஸ் மற்றும், மெலில்லாவில் புலம்பெயர்ந்தோருக்கு நிகழ்ந்துள்ள கடுந்துயர் குறித்த செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன என்றும், இப்பெருந்துயரில் இறந்தோர் நல்லதொரு வாழ்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள், இச்சகோதரர் சகோதரிகளுக்காக நாம் எல்லாரும் இறைவேண்டல் செய்வோம் என்றும், இத்தகைய துயர நிகழ்வுகள் ஒருபோதும் இடம்பெறாதிருக்க, ஆண்டவர் நம் இதயங்களைத் திறப்பாராக என்றும், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
டெக்சஸ் மாநிலத்தின் சான் அந்தோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட கனரக வாகனத்தில், கடும் வெப்பம் காரணமாகத் துன்புற்று, குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு சிறார் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர் என்று தீயணைப்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.