தீர்ப்பிடுதல் பெருங்குற்றம்!
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரான்ஸ் நாட்டில் உள்ள தூர்ஸ் நகரில் பிறந்தவர் பிரபல எழுத்தாளரான பல்சாக் (Balzac 1799 -1850) என்பவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி பிரஞ்சு இலக்கிய உலகில் தனக்கொன்று ஒரு முத்திரை பதித்தவர் இவர்.
‘ஒருவருடைய கையெழுத்தைப் பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லிவிடுவேன்’ என்று இவர் அடிக்கடி சொல்லிவந்தார். ஒருநாள் இவரிடம் ஒரு பெண்மணி ஒரு குழந்தையின் கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவந்து, ‘இந்தக் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, இதை எழுதியவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லுங்கள்” என்றார்.
பல்சாக் அந்தப் பெண்மணி கொண்டுவந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு ஒருநிமிடம் அமைதியானார். பின்னர் அவர் அந்தப் பெண்மனிப் பார்த்து, “இதை எழுதியது உங்களுடைய மகனா?” என்றார். “இல்லை” என்றார் அவர். அப்படியானால் உங்கட்கு அறிமுகமானவரா?” என்றார் அவர். அதற்கும் “இல்லை” என்றார் அந்தப் பெண்மணி. “அப்படியானால் உங்களிடம் உண்மையைத் தயங்காமல் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டுத் தொடங்கினார்: “இந்த எழுத்துக்குச் சொந்தக்காரன் சரியான முட்டாளாக இருக்கவேண்டும். அவன் வளர்ந்து பெரியவனானாலும் ஒன்றுக்கும் உதவாமல்தான் இருக்கவேண்டும்” என்றார்.
அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, “ஐயா! நான் சொல்கிறேன் என்று என்னைத் தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்… இந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நீங்கள்தான். சிறுவனாக இருக்கும்போது நீங்கள் எழுதியதுதான் இந்த எழுத்துகள்” என்றார். இதைக் கேட்டதும் பல்சாக்கால் எதுவும் பேச முடியவில்லை
எப்படி ஒருவருடைய கையெழுத்தை வைத்துக்கொண்டு அவர் இப்படிப்பட்டவர்தான் என்று தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றுதான் ஒருவருடைய வெளியடையாளத்தை வைத்து அவரைத் தீர்ப்பிடவும் முடியாது. அப்படிச் செய்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தீர்ப்பிடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
அடுத்தவரைத் தீர்ப்பிடும் யாவரும் இறைவனால் தீர்ப்பிடப்படுவர்
நற்செய்தியில் இயேசு தீர்ப்பிடாது வாழவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது, நாம் ஏன் பிறரைத் தீர்ப்பிடக்கூடாது என்பதற்கான மூன்று முதன்மையான காரணங்களைக் குறிப்பிடுகின்றார். அவை என்னென்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நாம் பிறரைத் தீர்ப்பிடக்கூடாது என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய முதன்மையான காரணம், நாமும் ஒருநாள் கடவுளால் தீர்ப்பிடப்படுவோம் என்பதால் ஆகும். இக்கருத்தினை யோவான், தன்னுடைய திருவெளிப்பாடு நூலில் மிக அழகாகக் கூறுவார். “உங்களுள் ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்” (திவெ 2: 23) என்று ஆண்டவர் கூறுவதாகச் சொல்வார். அப்படியானால், இந்த உலகத்தில் நான் என்ன செய்கின்றமோ அதற்கேற்ற கைமாறினை மறுவுலகில் பெறுவோம். ஒருவேளை நாம் அடுத்தவரைத் தவறாகத் தீர்ப்பிடித்துக் கொண்டிருந்தால், அதற்கான வெகுமதி நிச்சயம் பெறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
அடுத்தவரைத் தீர்ப்பிடும் யாவரும் அடுத்தவரால் தீர்ப்பிடப்படுவர்
நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடக்கூடாது என்பதற்கு இயேசு சொல்லும் இரண்டாவது காரணம், மற்றவரால் நாமும் தீர்ப்பிடப்படுவோம் என்பதால் ஆகும். நாம் அடுத்தவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அடுத்தவர் மட்டும் சும்மா இருப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. அடுத்தவரும் நம்மைத் தீர்ப்பிடுவார். அதனால் தீர்ப்பிடுவது என்பது சங்கிலித் தொடர் போன்று நீண்டகொண்டே செல்லும். என்றைக்கு நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடுவதை நிறுத்துகின்றோமோ, அன்றைக்குத்தான் அடுத்தவரும் நம்மைத் தீர்ப்பிடுவதை நிறுத்துவார். இதைதான் இயேசு நீங்கள் எந்த அளவையில் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்கட்கு அளக்கப்படும் என்று கூறுகின்றார். ஆகையால், பிறர் நம்மைத் தீர்ப்பிடாமல் இருக்க, நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடாமல் இருப்பது அவசியமாகும்.
அடுத்தவரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னம் நம்மைச் சீர்தூக்கிப் பார்த்து நல்லது
நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடக்கூடாது என்பதற்கு இயேசு சொல்லும் மூன்றாவது காரணம், நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடுவதற்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாதவர்கள் என்பதால்தான். நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய மரக்கட்டை, துரும்பு உருவகத்தில் துரும்பை விட மரக்கட்டை பன்மடங்கு பெரிது. அவ்வளவு பெரிய தவறை ஒருவர் தன்னிடம் வைத்துக்கொண்டு சிறிய தவறு செய்த ஒருவரை தீர்ப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்பதால்தான் இயேசு தீர்ப்பிட வேண்டாம் என்று சொல்கின்றார். ஆதலால், பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னம், நம்மை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு காரியமாகும்.
சிந்தனை
‘ஆள்பார்த்து செயல்படாத கடவுள் நேர்மையற்றவர்க்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைமாறாக அளிப்பார் (கொலோ 3: 25) என்பார் பவுல். ஆகையால், நாம் பிறரை நேர்மையற்ற முறையில் தீர்ப்பிட்டுக்கொண்டு, நேர்மையற்ற தீர்ப்பினை பெறாமல், பிறரிடம் உள்ள நல்லதைக் கண்டு பாராட்டுவோம், நல்ல தீர்ப்பினையும் அதன்வழியாக இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed